பக்கம் எண் :

பக்கம் எண்:121

உரை
 
3. மகத காண்டம்
 
8. பாங்கர்க் குரைத்த
 
         
     
           முற்ற நோன்பு முடியு மாத்திரம்
     25    கொற்றக் கோமான் குறிப்பின் றாயினும்
           வினவ வேண்டா செல்வென விரும்பி
           மெல்லென் கிளவி சில்லென மிழற்றிப்
           புனைமாண் வையம் பொருக்கெனத் தருகென
           வினைமா ணிளையரை யேவலின் விரும்பி
     30    நாப்புடை பெயரா மாத்திரம் விரைந்து
           காப்புடை வையம் பண்ணி யாப்புடை
           மாதர் வாயின் மருங்கிற் றருதலின்
 
           (பதுமாபதி கூற்று)
       24 - 32 ; முற்ற..............தருதலின்
 
(பொழிப்புரை) அது கேட்ட பதுமாபதி அப் பார்ப்பனமகனை
  இச் செலவைத் தலைக்கீடாகக் கொண்டு இன்றும் காணலாம் என்னும்
  அவா வுந்துதலாலே நன்று நன்று நாம் மேற்கொண்டுள்ள காமனோன்பு
  முழுதும் முடியுமளவும் யாம் பொழில் விளையாடற்கு வெற்றி
  பொருந்திய மன்னவன் கட்டளை நமக்கில்லையாயினும் அம்
  மன்னவனைக் கேட்டு உடன்பாடு பெறுதலும் மிகையாம். யாமே
  செல்வேம், என்று மெல்லிய மொழிகள் பலவற்றை மிழற்றியவளாய்த்
  தொழின் மாட்சிமையுடைய ஏவலிளையரை நோக்கி நீயிர் சென்று
  ஒப்பனை மாட்சிமையுடைய நம் வண்டியை விரைந்து கொணர்க! என்று
  ஏவுதலாலே அவர் தாமும் அவள் நாவசைந்த மாத்திரையே விரைந்து
  போய்க் காவலமைந்த வண்டியை ஒப்பனை செய்து அன்புடைய
  பதுமாபதியின் கன்னிமாடத்தின் முன்றிலிலே கொணர்ந்து நிறுத்துதலாலே
  என்க,
 
(விளக்கம்) நோன்பு முற்ற முடியுமாத்திரம் என மாறுக.
  கோமான் - தருசகன். செலவிற்குக் கோமானை வினவ வேண்டா
  என்றவாறு. கிளவி-மொழி. பொருக்கென ; விரைவுக்குறிப்பு,
  மாதர் - பதுமாபதி.