பக்கம் எண் :

பக்கம் எண்:133

உரை
 
3. மகத காண்டம்
 
8. பாங்கர்க் குரைத்த
 
         
     
           ஈங்கிது கேட்கென விசைச்ச னுரைக்கும்
     100    மன்னிய விழுச்சீர் மகதத்து மகளிர்
           நன்னிறை யுடையர் நாடுங் காலை
           மன்னவ னாணையு மன்ன தொன்றெனாக்
           கன்னி தானுங் கடிவரை நெஞ்சினள்
           வேட்டுழி வேட்கை யோட்டா வொழுக்கினள்
 
         (இசைச்சன் மறுத்தல்)
     99 - 104 : ஈங்கிது,,,,,,,,,,,,,,,,,ஒழுக்கினள்
 
(பொழிப்புரை) அதுகேட்ட இசைச்சன் என்பான் 'பெருமானே !
  யான் கூறு மிதனைக் கேட்டருள்க!' என்று உதயணனை நோக்கிக்
  கூறுவான் ;- 'நிலைபெற்ற பெருஞ் சிறப்பினையுடைய இம்மகத
  நாட்டு மகளிர் எல்லாம் நல்ல நிறையினை யுடையராவர். அங்ஙனம்
  நிறையுடையராதற்குக் காரணந்தான் யாதென ஆராயுமிடத்து, இந்நாட்டு
  மன்னவனுடைய ஆணையும் அத்தகைய சிறப்பினை
  யுடையதொன்றாதல் உணரலாம். பெருமானாற் கூறப்பட்ட கன்னியாகிய
  அப் பதுமாபதிதானும்  மிகுந்த வரையறையையுடைய நெஞ்சினை
  யுடையவளாவாள். தன்னெஞ்சு விரும்பிய இடத்திலெல்லாம் தன்
  அவாவினைச் செல்லவிடாத திட்பமான ஒழுக்கத்தையுடையாள்' என்க.
 
(விளக்கம்) இசைச்சன்- உதயணனுடைய பார்ப்பனத்
  தோழன், விழுச்சீர்-பெருஞ்சிறப்பு. நிறை-நெஞ்சத்தைத் தீய
  வழியிற் செல்லாத படி நிறுத்தும் திட்பமுடைமை. ' அருந்திற
  லரசர் முறைசெயினல்லது பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச்
  சிறவாது' சிலப். (28 - 207- 8) எனவும், 'மாதவர் நோன்பு
  மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனி னின்றால்'
.  (மணி 22- 2o8-9) எனவும், கூறுதல் பற்றி அந்நாட்டு
  மகளிரெல்லாம் நிறையுடையராதற்கு 'மன்னவன் ஆணையும் 
  அன்னது ' என்று காரணங் காட்டினன். கற்புடைமைக்கு
  மன்னனாணையே அன்றி மகளிர் காவலும் இன்றியமையாமையின்
  பின்னரும் கன்னிதானுங் கடிவரை நெஞ்சினள் என்றான்.
  கன்னி - பதுமாபதி. 'வேட்டுழி வேட்கை யோட்டா வொழுக்கினள்'
  என்றது ?சென்ற விடத்தாற் செலவிடா தீதுஒரீஇ நன்றின்பால் உய்க்கும்?
  திண்ணிய அறிவினையுடையாள் என்றவாறு.