பக்கம் எண் :

பக்கம் எண்:134

உரை
 
3. மகத காண்டம்
 
8. பாங்கர்க் குரைத்த
 
         
     105    அற்றன் றாயிற் கொற்றங் குன்றித்
           தொடிகெழு தோளி சுடுதீப் பட்டெனப்
           படிவ நெஞ்சமொடு பார்ப்பன வேடம்
           கொண்டான் மற்றவன் கண்டோர் விழையும்
           வத்தவர் கோமா னென்பதை யறிவோர்
     110    உய்த்தவட் குரைப்ப வுணர்ந்தன ளாகிப்
           பெறுதற் கரிய பெருமக னிந்நகர்
           குறுக வந்தனன் கூறுதல் குணமென
 
          (இதுவுமது)
     105 - 113 ;  அற்று................விட்டனளாகும்
 
(பொழிப்புரை) ''அங்ஙனமின்றி அப்பதுமாபதி பெருமான்பால்
  காதலுடையாள் ஆயினமைக்குக் காரணம் கண்டோர் விரும்பும்
  உதயணகுமரன் அரசுரிமையிற் குறைந்து தொடி பொருந்திய
  தோளையுடைய தேவியாகிய வாசவதத்தை சுடுதீயிற் பட்டு
  மாண்டமையாலே நோன்புடைய நெஞ்சத்தோடு பார்ப்பன வேடம்
  பூண்டு ஈண்டு வந்துளன் என்னுஞ் செய்தியை  அறிந்தவர்,
  அச்செய்தியைக் கொண்டுபோய் அப்பதுமாபதிக்கு உணர்த்த
  நின்னை அவன் உதயண குமரன் என்றே உணர்ந்தவனாய் யாம்
  கணவனாகப் பெறுதற்கரிய சிறப்புடைய அப்பெருமகனே
  இவ்விராசகிரிய நகரை அணுகினன். ஆதலால் நமது காதலை
  அவனுக்கு நாமே அறிவித்தல் நன்றென நினைந்து தன் னெஞ்சின்
  நிறையினை விட்டு நின்னைக் காதலித்தவளாதல் வேண்டும்" என்க,
 
(விளக்கம்) பதுமாபதி நின்னைக் காதலியாள். நீ கூறுகிறபடி
  காதலித்திருத்தல் வாய்மையாயின், அவள் பார்ப்பன வேடத்தோடிருக்கும்
  நின்னை உதயணன் என்றே அறிந்து காதலித்திருத்தல் வேண்டும் என்றவாறு.
  கொற்றம்-அரசுரிமை. தோளி - வாசவதத்தை. படிவம்-நோன்பு,
  அவட்கு-பதுமாபதிக்கு.