பக்கம் எண் :

பக்கம் எண்:141

உரை
 
3. மகத காண்டம்
 
9. கண்ணிதடுமாறியது
 
           வளங்கெழு வாழை யிளஞ்சுருள் வாங்கித்
           தாமரைப் பொய்கையுந் தண்பூங் கேணியும்
           காமன் கோட்டமுங் கடிநகர் விழவும்
           மாமலர்க் கோதை மடமொழி யூரும்
     15     வையக் கஞ்சிகை வளிமுகந் தெடுக்கவத்
           தெய்வப் பாவையைத் தேனிமிர் புன்னைத்
           தான்முதல் பொருந்தித் தானவட் கண்டதும்
           காமர் நெடுங்கண் கலந்த காமமும்
           இன்னவை பிறவுந் தன்முத லாக
     20    உள்ளம் பிணிப்ப வுகிரிற் பொறித்து
 
                  (உதயணன் செயல்)
              11 - 20 ; வளம்,,,,,.,,,பொறித்து
 
(பொழிப்புரை) இனி அவ் வுதயண குமரன் றானும் தனித்துச்
  சென்று வளம்பொருந்திய வாழையினது சுருண்டிருக்கும் இளங்
  குருத்தினைக் கைக்கொண்டு விரித்து அதன்கண், தாமரைக்
  குளமும் குளிர்ந்த மலர்களையுடைய கேணியும் காமவேள்
  கோட்டமும் ஆங்கு நிகழும் திருவிழாக் காட்சியும் சிறந்த மலர்
  மாலையணிந்த மடப்பமுடைய மொழிகளையுடைய பதுமாபதி
  ஊர்ந்து வந்த வண்டியின் திரைச் சீலையைக் காற்றுத் தூக்கி
  உயர்த்துதலாலே அந்தத் தெய்வப் பெண் போன்ற பதுமாபதியைத்
  தான் வண்டுகள் இசை பாடும் புன்னை மரத்தினது அடியில்
  நின்று கண்ட காட்சியும், காதல் மிக்க தங்கள் இருவருடைய
  நெடிய கண்களும் தம்முட் கலந்தமையால் உண்டான காமத்
  தோற்றமும் இவைபோன்ற பிற காட்சிகளும் தன் பொருட்டுக்
  கண்டோர் நெஞ்சத்தைக் கவரும்படி தன் நகத்தால் சித்திரித்து;
  என்க.
 
(விளக்கம்) இளஞ்சுருள் - சுருண்டிருக்கும் இளங் குருத்து.
  பொய்கை. கேணி முதலியன ; காமன் கோட்டத்தின் பக்கத்திலுள்ளவை.
  மடமொழி - பதுமாபதி. வையம்-தேர். கஞ்சிகை- திரைச்சீலை.
  தெய்வப் பாவை -பதுமாபதி. தேன் - வண்டு அவள் - பதுமாபதி.
  காமர் - அழகு, முதல்-காரணம். உகிர்-நகம். பொறித்து - பதித்து.