பக்கம் எண் :

பக்கம் எண்:144

உரை
 
3. மகத காண்டம்
 
9. கண்ணி தடுமாறியது
 
         
     35    உள்ள மூர்தர வொழிநிலத் தோங்கிக்
           கொடுக்குஞ் சீர்க்கமு மடுத்தூழ் வளைஇய
           முத்த மாலையும் வித்தக மாகிய
           உளிப்பெருங் கம்மமு முகத்துமுத லுறீஇத்
           திண்டூட் சதுரங் கொண்ட வெல்லையுட்
     40    சீயமு மேறுந் திருவும் பொய்கையும்
           சேயிதழ் மலருங் காம வல்லியும்
           மேயினர் விழைய மேதகப் புணர்ந்த
           கோலக் கோயுட் கொண்டுநிறை யமைத்த
           சூடமை சாந்து மீடறிந்து புனைந்ந
     45    மதங்கமழ் நறுமலர்ச் சதங்கைத் தாமமும்
           சாலக் கொள்கெனத் தன்வயிற் றிரியாக்
           கோலக் கூன்மகட் கறியக் கூறிச்
 
                  (இதுவுமது)
              35- 47; ஒழி,,,,,.,..கூறி
 
(பொழிப்புரை) வெளிநிலத்தில் உயர்ந்து நின்று கொடுக்கும்
  சீர்க்கமும் முதலிய சிற்பச் சிறப்புகளுடனே அடுத்தடுத்து நிரல்
  பட வளைத்த முத்துமாலைகளையும், சதுரப்பாடுடைய உளித்
  தொழில் திறமும், முகப்பின்கண் உடைய திண்ணிய தூண்களாலே
  நாற்கோணம் அமைந்த இடத்தே சிங்கமும், காளையும் திருமகளும்,
  பொய்கையும், செந்தாமரை மலரும், காம வல்லியும், ஆகிய
  இத்தகைய சிற்ப உருவங்களோடு தன்னை அடைந்தோர் பெரிதும்
  விரும்பும்படி மேன்மை யுண்டாக இயற்றப்பட்ட அழகிய பரணியில்
  அகிற்றேயவையும் நிறை தேர்ந்து கூட்டிய கத்தூரி மணங்கமழா
  நின்ற நறிய மலரால் இயன்ற சதங்கை. மாலையும் நிரம்பக்
  கொண்டு வருக' என்று கூறித் தன்பால் அன்பில் திரியாத வண்ண
  மகளாகிய அயிராபதியைத் தன்பால் நின்றும் போக்கி; என்க,
 
(விளக்கம்) ஒழி நிலம்-வருநிலம் கொடுக்கும் சீர்க்கமும்.
  என்பன பரணியின்கண் அமைந்த சிற்ப மண்டபத்தின் உறுப்புக்கள்.
  உளிப் பெருங்கம்மம்-உளியாற் செய்த சிறந்த தொழில். சீயம் -
  சிங்கம். ஏறு- காளை. திரு-திருமகள். சேயிதழ் மலர் - செந்தாமரை
  மலர். காம வல்லி - கற்பக மரத்தில் படரும் ஒரு வகைப் பூங்கொடி
  மேதக- மேன்மையுண்டாக. கோலக் கோயுள் - அழகிய பரணியில்.
  நிறை அமைத்த - நிறுத்துச் சேர்த்த, சூடமை சாந்து-அகிற்றேய்வை.
  மதம்-மான் மதம்; கத்தூரி. சதங்கைத் தாமம்-ஒரு வகை மாலை,
  கூன் மகள்-அயிராபதி.