பக்கம் எண் :

பக்கம் எண்:147

உரை
 
3. மகத காண்டம்
 
9. கண்ணி தடுமாறியது
 
           ஏற்ப முடித்துப் பூப்பிறி தணியாள்
     65    முத்தப் பேரணி முழுக்கல மொழித்துச்
           சிப்பப் பூணுஞ் செம்பொற் கடிப்பும்
           ஏக வல்லியு மேற்பன வணிந்து
           தாமரை யெதிர்போது வாங்கி மற்றுத்தன்
           காமர் செவ்வியிற் காய்நலம் பெற்ற
     70    நாம மோதிரந் தாண்முதற் செறித்துப்
           புனைநறுஞ் சாந்தமுந் துணைமலர்ப் பிணையலும்
           மனநிறை கலக்கிய கனல்புரை நோக்கத்துப்
           பொன்வரை மார்ப னென்னோ யகலக்
           கொள்ளி னன்றென வள்ளிதழ்க் கோதை
 
                  (இதுவுமது)
              64- 74 : பூ.........நன்றென
 
(பொழிப்புரை) அக் கூந்தலின்கண் வேறு மலர்களைச் சூடாளாய்
  முத்துமாலை முதலிய பேரழகுடைய அருங்கலன்களையும்
  அணிந்து கொள்ளாளாய்ச் சிற்பம் மிகுந்த அணிகலன்களையும்,
  செம்பொன்னாலியன்ற கடிப்பிணை என்னும் காதணியையும்,
  ஏகவல்லி என்னும் ஒற்றை வடத்தையும் இவைபோல்வன பிற
  மெல்லணிகலன்களையும் அணிந்துகொண்டு அப்பொய்கையின்
  கண் மலர்ந்துள்ள புது மலர்களைத் தாளோடு பறித்துப் பின்னரும்
  தனது விருப்பமுடைய நிறத்திற்குப் பொருந்தும் ஒளிநலன்
  பெற்ற தன் பெயர் பொறித்த மோதிரத்தை அத்தாமரைத் தண்டிற்
  செறித்து வைத்து அதனோடு பூசற்குரிய சந்தனத்தையும்,,
  இரட்டையாக வைத்துத் தொடுத்த மலர்மாலையினையும் சேர்த்து
  இவையிற்றை என்னுடைய மனத்திட்பத்தைக் கலக்கிவிட்ட
  தீப்போன்ற கொடிய பார்வையை யுடைய பொன்மலை போன்ற
  மார்பினையுடைய அப்பார்ப்பன மகன் என்னுடைய துயர் கெடும்படி
  கைக்கொள்வானாயின் மிகவும் நன்று என்று கருதி; என்க.
 
(விளக்கம்) உதயணன் வைத்த மலர் மாலைகளை அணிதற்
  பொருட்டு வேறு மலர்களை அணியாள் என்பது கருத்து. முழுக்கல
  முதலியவற்றையும் ஒழித்தமையும் அதன் பொருட்டென்க சிப்பம் -
  சிற்பம். கடிப்பு - ஒருவகைக் காதணி. ஏகவல்லி - முத்தாலியன்ற
  ஒற்றை வடம். எதிர்போது - மேலே எழுந்த தாமரைப் பூ; கதிரவனை
  எதிர்கொள்ளும் புதிய மலருமாம். நாம மோதிரம்-தன் பெயர் பொறித்த
  மோதிரம். துணை மலர்ப்பிணையல் - இரண்டிரண்டாக மலர்களைப்
  பிணைத்துக் கட்டிய கண்ணி. கனல் புரை நோக்கம் - தீப்போலச் சுடும்
  பார்வை; உதயணன் நோக்கம் தன் நெஞ்சத்தை இடையறாது வருத்துதலின்
  இங்ஙனம் கூறினள்.