பக்கம் எண் :

பக்கம் எண்:177

உரை
 
3. மகத காண்டம்
 
12.அமாத்தியர் ஒடுங்கியது
 
         
           ஏனை நூற்கு மேதில னல்லேன்
           கரந்துழி யறிய வருங்கல வெறுக்கை
     20    வைத்துழிக் காட்டும் வாய்மொழி விச்சை
           கற்றுக்கை போகிக் காணவும் பட்டது
           கொற்றவ னிவற்றுக் குறையொன் றுடையது
           காணவு மமையுங் காணா னாயினும்
           காவ லாளனைக் கட்பட லுறுவேன்
     25    காட்டுதல் குறையெனக் கேட்டவன் விரும்பி
           நல்லவை நாப்பட் செல்வனைச் சேர்ந்தவன்
           வல்லவை யெல்லாம் வலிதிற் கூறக்
 
           (இதுவுமது)
          18 - 27 ; ஏனை,,,,,,,,,,,,கூற
 
(பொழிப்புரை) 'அன்பனே,! பிற வித்தை நூல்களுக்கும், யான்.
  அயலேன் அல்லேன். புதைத்த பொருள் இருக்குமிடத்தை அறியவும்
  பேரணிகலன்களும் பொன்மணி முதலிய செல்வங்களும் வைத்து
  மறக்கப்பட்டு விட்ட இடங்களையும் காட்டா நின்ற மந்திரங்களாகிய
  வித்தைகளை நன்கு கற்று முதிர்ந்ததோ டன்றி அவையிற்றைக்
  கண்டெடுத்து முளேன். நுங்கள் அரசன் கருத்திற் கொண்டுள்ள அக்குறையை
  யான் கண்டு காட்ட அவன் காணவும் கூடும். அங்ஙனம் காண விரும்பா
  னாயினும் யான் நுங்கள் மன்னனைக் காணப் பெரிதும் விரும்புகின்றேன்.
  அங்ஙனம் அப்பொருளைக் காட்டுதல் என்னுடைய காரியமே யாகும்'' என்று
  கூறக் கேட்ட அக்காவலன் மிகவும் உதயணனை விரும்பி அவனை அழைத்து
  கொடுபோய் அரசவையின் நடுவே வீற்றிருந்த தருசக மன்னனை அடைந்து
  உதயணன் கற்று வல்ல வித்தைகளையும் அம்மன்னனுக்கு வலிந்து கூறுதலாலே;
 
(விளக்கம்) ஏனை நூல்-பிற வித்தையை யுடைய நூல்கள். ஏதிலன் -
  அயலான். வாய்மொழி - மந்திரம். கொற்றவன் - தருசகமன்னன் குறை -
  நிறைவேற்றுதற்குரிய செயல். கட்படல் - காண்டல். கேட்டவன்-காவலன்.
  நல்லவை-சான்றோர் குழுமிய அரசவை. செல்வன் - தருசகன். அவன் -
  உதயணன். வலிதிற் கூற - கேளாமலே வலிந்து கூற.