பக்கம் எண் :

பக்கம் எண்:178

உரை
 
3. மகத காண்டம்
 
12.அமாத்தியர் ஒடுங்கியது
 
         
           கற்றோர்க் காண்ட லாகுங் காவலிற்
           பெற்ற பயனென வெற்ற வேந்தனும்
     30    காண்பது விரும்பி மாண்பொடு புணர்ந்த
           பேரத் தாணி பிரிந்த பின்றை
           நேரத் தாணி நிறைமையிற் காட்டலிற்
           பகையறு குருசிலைப் பண்டுபயின் றன்ன
           உவகை யுள்ளமொ டொழுக்க மறாது
     35    கண்ணினுங் கையினு மன்றி நாவின்
           இன்னுழி  யிருக்கென விருந்த பின்றைக்
 
         (உதயணன் தருசகனைக் காணல்)
           28 - 36 : கற்றோர்,,,,,.,,.,,.பின்றை
 
(பொழிப்புரை) அதுகேட்ட வெற்றி வேந்தனாகிய தருசகனும்
  அரசாட்சியால் யான் அடைந்த பயன் நும்போன்று கற்றுவல்ல
  சான்றோர்களைக் காணுதலே ஆகும் என்று முகமன் கூறி வரவேற்று
  அவனை அளவளாவிக் காணுதலை விரும்பி அப்பேரவை கலைந்த
  பின்னர்ச் சிற்றோலக்க மண்டபத்திற்குக் கூட்டிச்சென்று நிறைந்த
  கேண்மையோடு ஆங்குள்ள காட்சிகளைக் காட்டுதலாலே பகைக்குணமற்ற
  உதயணனை முன்பும் பழகினாற்போன்ற மகிழ்ச்சியையுடைய உள்ளத்தோடு
  சான்றோர் ஒழுக்கத்தில் பிறழாது கண்ணாலாதல் கையாலாதலன்றி
  நாவாலேயே இன்ன இடத்திலே அமர்க! என்று தருசகன் உபசரிக்க அவன்
  காட்டிய இடத்தில் இருந்த பின்னர்; என்க.
 
(விளக்கம்) காவலிற்பெற்ற பயன்கற்றோர்க்காண்டல்ஆகும்என
  மாறுக. வெற்ற வேந்தன்-வெற்றியுடைய தருசக மன்னன். காண்பது -அவன்
  கற்றுள்ள வித்தைகளை அறிவது. பேரத்தாணி- பேரவை.  நேரத்தாணி-சிற்றவை.
  நிறைமை- நிறைந்த கேண்மை, குருசில் - உதயணன், ''செல்வுழிக் கண்ணொரு
  நாட்காணினும் சான்றவர், தொல்வழிக் கேண்மையிற்றோன்றப் புரிந்தியாப்பர்''
  என்பது(நாலடி. 154) நாவின் -நாவினாலேயே. அரசர்கள் கண்ணாலும் கையாலும்
  குறிப்பாகச் சைகை செய்து அமர்க என்று குறிப்பித்தல் வழக்கம். உதயணனைச்
  சிறப்பாக உபசரித்தலான் நாவின் இன்னுழி இருக்கெனக் கூறினான் என்பது கருத்து.
  பின்றை-பின்பு.