பக்கம் எண் :

பக்கம் எண்:179

உரை
 
3. மகத காண்டம்
 
12.அமாத்தியர் ஒடுங்கியது
 
         
           கற்றவை யெல்லாந் தெற்றென  வினாஅய்த்
           தானே கேட்டு வியந்துதலை துளக்கி
           ஆனாக் கட்டுரை கழிந்தபின் மேனாட்
     40    டள்ளா வென்றித் தம்மிறை வைத்த
           விள்ளா விழுப்பொரு ளுள்வழி யுணரா
           மன்னவன் மற்றிது நின்னி னெய்துவேன்
           கற்றறி விச்சையிற் காட்டுதல் குறையென்
 
           (இதுவுமது)
         37 - 43 : கற்றவை,,,,,,,,,,,,குறையென
 
(பொழிப்புரை) அவ்வுதயணன்கற்றுள்ள வித்தைகளை எல்லாம்
  தெளிவுண்டாக வினவித் தன் செவியாலேயே கேட்டு அவற்றின் அருமை
  பெருமைகளை உணர்ந்து தலையை அசைத்து அசைத்து ஒழியாத
  முகமனுரைகளைக் கூறி முடித்த பின்னர்ப் பண்டைக் காலத்தே கெடாத
  வெற்றியை யுடைய தன் தந்தை வைத்துப்போன மாறுபடாத சிறந்த
  பொருள்களை அறிந்து கொள்ள மாட்டாத அம்மன்னவன் ''சான்றோனே!
  எனது இக்குறையை நின்னால் தீர்த்துக் கொள்வேன். நீ கற்று அறிந்த
  வித்தையினாலே அவற்றைக் காட்டல் வேண்டுமென்பது என் வேண்டுகோள்''
  என்று அம்மன்னவன் வேண்டா நிற்ப; என்க.
 
(விளக்கம்) தெற்றென - தெளிவாக. அவற்றின் அருமை பெருமைகளை
  உணர்ந்து வியந்து என்க. தலை துளக்குதல் மருட்கை மெய்ப்பாடு, மேனாள் -
  பண்டு. தம்மிறை-தந்தை. விழுப்பொருள்- சிறந்த பொருள். மன்னவன் -
  தருசகன் . குறை- வேண்டுகோள்.