பக்கம் எண் :

பக்கம் எண்:180

உரை
 
3. மகத காண்டம்
 
12.அமாத்தியர் ஒடுங்கியது
 
         
           உற்றன னுரைப்ப வுள்வழித் தெரிந்து
     45    தான்வைத் தன்னபோற் காட்டலிற் றருசகன்
           ஆனாக் காதலொ டாருயி ரன்ன
           தோழ னாகித் தோன்றா தோற்றும்
           ஞான நவின்ற நல்லோ னிவனென
           எனைத்திவன் வேண்டினு மீவ னென்றுதன்
     50    கணக்குவினை யாளரொடு கரண மொற்றி
           அகத்தே யுறைகென வமைத்த பின்னர்
 
        (தருசகனுக்கு உதயணன் நிதியைக் காட்.டல்)
             44 - 51 ; உற்றனன்,,,,,.,,,,,,பின்னர்
 
(பொழிப்புரை) இவ்வாறு தன்னோடு உறவுடையனாகிய தருசகன்
  வேண்டுதலாலே அப்பொருள் இருக்கு மிடத்தைத் தன் வித்தையினாலே
  தெரிந்து தான் வைத்த பொருளைக் காட்டுவான் போல எளிதாகக்
  காட்டுதலாலே அத்தருசக மன்னன் அமையாத அன்போடு ஆருயிர்
  போன்ற தோழனாகி அறியவியலாத பொருளையும் அறிவிக்கும்
  அறிவினைப் பயின்ற நல்லோன் இவன் என்று தன் நெஞ்சத்துள் நன்கு
  மதித்தவனாய் எத்துணைப் பொருள் இவன் வேண்டினும் யான் வழங்குவல்
  என்று கருதிக்கொண்டு தன் கணக்கு மாந்தரொடு அவர் காரியங்களை
  ஆராய்ந்து கொண்டு எம்மரண்மனைக்குள்ளேயே இனிதின் உறைவாயாக
  என்று அமைந்த பின்பு; என்க.
 
(விளக்கம்) உற்றனன்-கேண்மையாற் பொருந்தியவன். உதயணன்
  காட்டலின் என்க. ஆனாக் காதல் -ஒழியாத அன்பு. தோன்றா தோற்றும் -
  அறிதற்கியலாத பொருளை அறிவிக்கும். நவின்ற - பழகிய. எனைத்து -
  எவ்வளவு. கணக்கு - வினையாளர் - கணக்கெழுதும் தொழிலாளர். கரணம்
  -காரியம்.