பக்கம் எண் :

பக்கம் எண்:200

உரை
 
3. மகத காண்டம்
 
14. நலனாராய்ச்சி
 
         
           மதலை மாடத்து மடமொழி மாதரொ
           டுதயண குமர னொடுங்கிய வுவகையன்
           விண்ணுறை தேவரும் விழையும் போகத்துப்
           பெண்ணுறை யுலகம் பெற்றோன் போலவும்   
 
          (உதயணன் நிலை)
       1 - 4 : மதலை.........போலவும்
 
(பொழிப்புரை) இவ்வாறு பதுமாபதியினது கன்னிமாடத்துள்ள
  மதலை மாடத்தின்கண் மடப்பமுடைய மொழிகளையுடைய அப் பதுமாபதியுடன்
  மறைந்திருத்தலால் உண்டாகிய பெருமகிழ்ச்சியையுடைய உதயணகுமரன்
  வானுலகத்தில் உறைகின்ற தேவர்களும் விரும்புவதற்குக் காரணமான இன்ப
  நுகர்ச்சியினையுடைய பெண்ணுறை உலகம் பெற்றவனைப் போலவும் என்க,
 
(விளக்கம்) மடமொழிமாதர்-பதுமாபதி பெண்ணுறை
  உலகம்- பெண்கள் மட்டுமே நிறைந்துள்ள மணித்தீவம். இதனை,
  'பெண்ணுலகேய்ப்பக் கன்னி மகளிர்' (1...42 - 181 - 2) என முன்னும் 
  கூறினமையால் உணர்க.