பக்கம் எண் :

பக்கம் எண்:208

உரை
 
3. மகத காண்டம்
 
14. நலனாராய்ச்சி
 
         
           வாய்முத றோறுந் தான்முத லணிந்த
           அந்தண் மாலையு மகடுதோ றணவரப்
           பைம்பொற் புளகம் பரந்துகதி ரிமைப்ப
     70    ஐவே றுருவின் மெய்பெறப் புனைந்த
           பொய்வகைப் பூவும் வையெயிற் றகல்வாய்
           மகரத் தங்கண் வகைபெறப் போழ்ந்த
           காம வல்லியுங் களிறும் பிடியும்
           தேமொழிச் செவ்வாய்த் திருமகள் விரும்பும்
     75    அன்ன வீணையு மரிமா னேறும்
           பன்மரக் காவும் பாவையும் பந்தியும்
           பறவையும் பிறவு முறநிமிர்ந் தோவா
           நுண்ணவாப் பொலிந்த கண்ணவா வுறூஉம்
           மீமிசைக் கட்டின் வாய்முதற் றாழ்ந்த
     80    வண்ணப் படாஅங் கண்ணுறக் கூட்டிப்
 
           (இதுவுமது)
         67- 80; வாய் ,,,,,,,., கூட்டி
 
(பொழிப்புரை)   முகப்புக்கள் தோறும் அழகிய குளிர்ந்த மலர்மாலையும்
  நடுஇடந்தோறும் சேரப்பசிய பொன்னாலியன்ற கண்ணாடிகள் ஒளிபரப்பி
  விளங்காநிற்ப, ஐவகை நிறங்களாலும் உண்மை போலத் தோன்றும்படிசெய்த
  பொய்ப்பூக்களும் கூரிய பல்லையும் அகன்ற வாயையுமுடைய மகர மீனினது
  வாயினின்றும் முளைத்த காமவல்லியும் களிற்றியானையும் பிடியானையும் இனிய
  மொழியினையும், சிவந்த வாயினையுமுடைய பதுமாபதி மிகவும் விரும்பும்
  அன்னவீணையும் ஆண் சிங்கமும் பலவாகிய மரங்களையுடைய சோலையும்
  பாவையும் பறவைகளும் ஆகிய ஓவியங்கள் பெரிதும் பொலிவுடையவாய்க்
  கண்கள் விரும்புவதற்குக் காரணமான உச்சிக் கட்டிலி னின்றும் தூங்குகின்ற
  ஓவியத்திரையும் பொருந்துமாறு சேர்த்து; என்க.
 
(விளக்கம்) புளகம் கண்ணாடி. ஐவேறுரு - ஐந்துநிறங்கள்.
  மெய்பெற-உண்மையாகத் தோற்றும்படி. பொய்ப்பூ - நெட்டி
  முதலியவற்றால் செய்தபூ. மகரமீனை ஊடுருவிச் செல்லும்
  காமவல்லி என்க. திருமகள்-பதுமாபதி.
  அன்னவீணை - அன்னப்பறவையின் வடிவமையச் செய்யப்பட்ட
  வீணை, பாவைப்பந்தி என்க. உம்மை, இசைநிறை.