பக்கம் எண் :

பக்கம் எண்:227

உரை
 
3. மகத காண்டம்
 
14. நலனாராய்ச்சி
 
         
           
           
           
           ஒள்ளுறை நீக்கி யொளிபெறத் துடைத்து
           வன்பிணித் திவவு வழிவயி னிறுத்த
           மெல்விர னோவப் பல்கா லேற்றி
           ஆற்றா ளாகி யரும்பெறற் றோழியைக்
     205    கோற்றேன் கிளவி குறிப்பிற் காட்டக்
 
          (இதுவுமது)
       201-205 :ஒள்ளுறை.........காட்ட
 
(பொழிப்புரை) அந்த யாழினது ஒள்ளிய போர்வையை அகற்றி
  ஒளி உண்டாகும்படி அந்த யாழினைத் துடைத்து வலிய
  பிணிப்பினையுடைய திவ்வினை அதன் இடத்திலே நிறுத்தி
  வைத்தற்குத் தனது மெல்லிய விரல்கள் நோகும்படி பலகாலும்
  ஏற்றி ஏற்றிப் பார்த்து இயலாதவளாய்ப் பெறற்கரிய தோழியை
  நோக்கிக் கொம்புத் தேன் போன்ற இனிமையுடைய
  மொழியினையுடைய அப்பதுமாபதி குறிப்பாகப் பணித்தலாலே
  என்க
 
(விளக்கம்) உறை-போர்வை. திவவு - வார்க்கட்டு, வழிவயின்-
  அஃதிருக்க வேண்டிய இடத்தில். தோழி- யாப்பியாயினி. வாயினாற்
  சொல்லாமல் சைகையால் உணர்த்தி என்றபடி.