பக்கம் எண் :

பக்கம் எண்:24

உரை
 
3. மகத காண்டம்
 
1. யாத்திரை போகியது
 
         
     175    எரியுள் விளிந்தவென் வரிவளைப் பணைத்தோள்
           வள்ளிதழ்க் கோதை யுள்ளுழி யுணரிற்
           கவற்சி வகையிற் பெயர்த்தனை களைஇயர்
           அரும்பூங் கோதைப் பூந்தா துண்டவள்
           அவிழ்பூங் கூந்தலுண் மகிழ்துயில் வெய்தி
     180    நீயு மெவ்வந் தீர யானும்
           நல்லிள வனமுலை புல்லுபு பொருந்த
           உய்த்தனை காட்டுதி யாயிற் கைம்மா
           றித்துணை யென்பதொன் றில்லென விரங்கியும்
 
                 (இதுவுமது)
             175 - 183 ; எரி............இரங்கியும்
 
(பொழிப்புரை) தீயினுட்பட்டு இறந்துபட்ட என் காதலியாகிய
  வரிவரியாக அணியப்பட்ட வளையல்களையும், மூங்கில் போன்ற
  தோள்களையும், பெரிய இதழையுடைய மலர் மாலையினையும் உடைய
  வாசவதத்தை இருக்கு மிடத்தை நீ அறிவாயெனின், என்னை என்
  கவலை வகைகளி னின்றும் அகற்றி என் துயரத்தைத் தீர்க்கவும், நீதானும்
  அவளுடைய பெறுதற்கரிய  மாலையின்கண் மலரிடத்தே  தேனுண்டு
  அவளுடைய அவிழ்ந்த கூந்தலினூடே மனம் மகிழ்தற்குக் காரணமான
  இனிய துயிலைப் பெற்று நினது துன்பங்களும் தீரவும், மேலும், யானும்
  அவளுடைய அழகிய இளமுலையினைத் தழுவி  இன்புறா நிற்பவும்
  என்னை அவ்விடத்தே அழைத்துப் போய் அவளைக் காட்டுக! அங்ஙனம்
  காட்டுவா யாயின் அவ்வுதவிக்கு அளியேன் நினக்குச் செய்யவேண்டிய
  கைம்மாறுக்கு இவ்வளவு என்னும் ஓர் எல்லை கூறவும் இயலுமோ? என்று
  இரங்கியும் என்க,
 
(விளக்கம்) எரி - தீ. கோதை-வாசவதத்தை. கவற்சி-கவலை;
  களைஇயர் - களைய, அவள் கோதைத் தாதுண்டு கூந்தலுள் துயில் எய்தி
  எவ்வந்தீர என்க. ''காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப்
  பெரிது,'' எனவும, (குறள் 102) "பயன்றூக்கார் செய்த வுதவி நயன்றூக்கினன்மை
  கடலிற் பெரிது'' எனவும்  (குறள்-103) சான்றோர் ஓதுபவாகலின் ''காட்டுதியாயிற்
  கைம்மா றித்துணை என்பது ஒன்றில்.?என்றான்.
    என் கவற்சி வகையிற் களையவும் நீ எவ்வந்தீரவும் யானும் பொருந்தவும்
  காட்டுதி என உம்மை விரித்து இயைத்துக் கொள்க.