பக்கம் எண் :

பக்கம் எண்:269

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
         
     60    என்ன வாயினு மன்னது விழையா
           தொடுங்கி யிருந்தே யுன்னியது முடிக்கும்
           கொடுங்காற் கொக்கின் கோளின மாகிச்
           சாய்ப்பிட மாகப் போர்ப்படை பரப்பி
           வலிகெழு வேந்தனை வணக்குது மென்னத்
     65    தெளிவுசெய் தெழுந்து திருமலி நன்னாட்
           டெல்லை யிகந்து வல்லை யெழுந்து
           கடுந்தொழின் மேவலொ டுடங்குவந் திறுத்தலின்
 
                     (இதுவுமது)
              60 - 67 : என்ன.........இறுத்தலின்
 
(பொழிப்புரை) இத்தகைய சூழ்ச்சிகளுள் வைத்து எதனைச் செய்தாலும் அவன் கொடையை விரும்பாமல், ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வளைந்த காலையுடைய கொக்கு ஒடுங்கியிருந்தே தான் கருதியதனை முடித்துக் கொள்ளுமாப் போலே, யாம் அவன் போர்க்கு வருந்துணையும் பின்வாங்குங் குறிப்போடே இருந்து வந்துழி நம் போர்ப் படைகளைப் பரப்பி வலிமை மிக்க அத் தருசக மன்னனை வென்று நம்மை வணங்கும்படி செய்வோம் என்று தமக்குள் ஆராய்ந்து முடிவு செய்து கொண்டு, அம் மன்னர்கள் செல்வம் மலிந்த தங்கள் நாட்டினது எல்லையைக் கடந்து புறப்பட்டுக் கொடிய போர் செய்தலின்கண் விருப்பத்தோடு இராசகிரிய நகரத்தில் மருங்கு வந்து அந்நகரத்தை வளைத்துக் கொள்ளுதலாலே; என்க.
 
(விளக்கம்) என்னவாயினும் - எத்தகைய சூழ்ச்சியாய் இருப்பினும். கொக்கின் கோளினமாகி - கொக்கினது கொள்கையை உடையேமாய். சாய்ப்பிடமாக - பின்வாங்குங்குறிப்போடு. வேந்தனை : தருசகனை. தெளிவுசெய்து - கூட்டத்தினின்றும் எழுந்து என்க. இகந்து - கடந்து. வல்லை - விரைந்து. படையோடெழுந்து என்க. கடுந்தொழில் - போர்த்தொழில். மேவல் - விரும்புதல். உடங்கு - ஒருங்கு.