பக்கம் எண் :

பக்கம் எண்:280

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
           பல்லுறைப் பையி னுள்ளறை தோறும்
           நாகத் தல்லியு நயந்ததக் கோலமும்
           வாசப் பளிதமுஞ் சோணப் பூவும்
           குங்குமக் குற்றியுங் கொழுங்காற் கொட்டமும்
     135    ஒண்காழ்த் துருக்கமு மொளிநா குணமும்
           காழகி னூறுங் கட்சா லேகமும்
           கோழிரு வேரியும் பேரில வங்கமும்
           அந்தண் டகரமு மரக்கு மகிலும்
           சந்தனக் குறையொடு சாந்திற் குரியவை
     140    பிறவு மொருவா நிறைய வடக்கி
 
                (மணப் பொருள்கள்)
              131 - 140 : பல் ......... அடக்கி
 
(பொழிப்புரை) பலவாகிய உறைப் பைகளில் அமைந்த உள்ளறைகளிலே நாகமலர் அகவிதழும், விரும்பப்பட்ட தக்கோலமும், மணமுடைய பச்சைக் கருப்பூரமும், சோணப்பூவும், குங்குமப்பூவும், கொழுவிய காலை யுடைய கொட்டமும், ஒளிமிக்க வைரமுடைய  துருக்கமும், ஒளியையுடைய நாகுணமும், வைரமேறிய அகிற் பொடியும்; கணுக்களையுடைய சாலேகமும், கொழுவிய வெட்டிவேர் விலாமிச்சை வேர் என்னும் இருவேரியும், பெரிய இலவங்கமும் அழகிய குளிர்ந்த தகரமும் அரக்கும் அகிற்குறடும் சந்தனக் குறடும் நறுமணச் சாந்திற்கு உரியனவாகிய இன்னோரன்ன பிறவும் நீங்காமல் நிறைய அடக்கி வைத்து; என்க,
 
(விளக்கம்) உறைப்பல் பை என மாறுக. அல்லி - அகவிதழ்; தக் கோலம் - பஞ்சவாசத்தொன்று. பளிதம் - பச்சைக் கருப்பூரம். சந்தனக் குறை - சந்தனக் குறடு (கட்டை). ஒருவா - நீங்காமல்.