பக்கம் எண் :

பக்கம் எண்:290

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
           வத்தவ ரிறைவனொடு மொய்த்திறை கொண்டு
           பாடியுட் டமக்கிடம் பாற்படுத் தமைத்து
     205   வீட்டின தளவும் விறற்படை வீரமும்
           கூட்ட மன்னர் குறித்தவும் பிறவும்
           இருளும் பகலு மருவின ராராய்ந்
           தருந்திற லாள ரொருங்குயி ருண்ணும்
           கூற்றத் தன்ன வாற்றல ராகி
 
              (உதயணன் முதலியோர் செயல்)
              203 - 209 : வத்தவர் ......... ஆகி
 
(பொழிப்புரை) வெல்லற்கரிய ஆற்றலுடைய உருமண்ணுவாவும்  மறவரும் இவ்வாறு அப் பகைவர் பாசறையுள் இடம் பெற்றுத் தம்மரசனாகிய உதயணனோடு உட்புகுந்து அப்பாசறைக்குள்  தாம் தனித்திருப்பதற்கு ஏற்ற இடத்தை வகுத்துக்கொண்டு தங்கியிருந்து அங்குத் தங்கியிருக்கும் அப்பகை  மன்னர் பாசறைப் படையினது அளவும் வெற்றியுடைய அப் படையின் மறப் பண்பும் கூட்டமாகிய அப் பகை மன்னர் கருத்தும் பிறவும் இரவினும் பகலினும் அவர்களோடு ஊடாடி ஆராய்ந்து அறிந்துகொள்வாராய் அப் பகைப் படைகளை ஒரே பொழுதின்கண் உயிருண்ணுதற்குக் கருதியிருக்கும் கூற்றுவன் போன்ற ஆற்றலுடையவராய்; என்க.
 
(விளக்கம்) பாடியுள் - பகைவருடைய பாசறையுள். வீடு - படைவீடு. கூட்ட மன்னர் - பகை மன்னராகிய எண்மர். இவர் சங்க மன்னர் எனவும் வழங்கப்படுவர். விறல் - வெற்றி. இருள் - இரவு. ஒருங்குயிருண்ணுங் கூற்றம் என்னும் இதனோடு, ''எருமைக் கடும்பரி யூர்வோ னுயிர்த்தொகை, ஒருபக லெல்லையி னுண்ணும்'' (சிலப். 26 : 215 - 6) என்னும் இதனையும் நினைக.