பக்கம் எண் :

பக்கம் எண்:298

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
            வத்தவன் கொண்ட மாமுர சியக்கி
            அயிலிற் புனைந்த வெயில்புரை யொள்வாள்
     245     உரீஇய கைய ராகி யொரீஇக்
            காவன் மறவரைக் கண்படை யகத்தே
            வீழ நூறி வேழந் தொலைச்சி
            மலையெனக் கவிழ மாமறித் திடாஅக்
            கொலைவினைப் படைமாக் கொடியணி நெடுந்தேர்
     250     வத்தவன் மறவர் மொய்த்தன ரெறியக்
 
                     (இதுவுமது)
             243 - 250 : வத்தவன் ......... எறிய
 
(பொழிப்புரை) உதயணனுக்குரிய பெரிய முரசத்தை முழக்கிக் கொண்டு இரும்பாலியற்றிய வெயில் போன்று சுடர் வீசும் வாட்படையை உறையி னின்றும் உருவிய கையராய்ச் சென்று ஆங்குக் காவல் செய்திருந்த மறவர்களைத் துயிலின்கண் கொன்று யானைப் படைகளை வென்று மலை கவிழ்ந்தாற் போலக் கவிழ்ந்து வீழும்படி செய்து குதிரைகளைக் கொன்று, கொல்லுந் தொழிலையுடைய காலாட் படைகளையும் குதிரை பூண்ட கொடி யுயர்த்திய நெடிய தேர்களையும் அவ்வுதயணனை மறவர்கள் சூழ்ந்து கொண்டு அழித்தலாலே என்க.
 
(விளக்கம்) வத்தவன் : உதயணன். வத்தவனுக்குரிய சங்கேத ஒலியால் முரசினை முழக்கி என்பது கருத்து. அயில - இரும்பு. புரை; உவம உருபு. உரீஇய - உருவிய. ஒரீஇ - சென்று. மா - குதிரை. மறித்திடா - மறிக்கச் செய்து.