பக்கம் எண் :

பக்கம் எண்:308

உரை
 
3. மகத காண்டம்
 
18. தருசகனோடு கூடியது
 
           பூப்புரி முற்றம் பொலியப் புகுந்து
           வாய்ப்பொரு ளாக வறிந்துவந் தோர்களைக்
           காட்டுக விரைந்தெனக் காவல னருள
           நகரங் காடிதொறும் பகர்வன னறையும்
     45    வாட்டொழிற் றடக்கை வயந்தகற் காட்டி
           உட்பட் டதனை யொழிவின் றுணர்ந்துநின்
           கட்பட் டுணர்த்துதல் கரும மாக
           வந்தன னிவனென வெந்திறல் வேந்தன்
           பருகு வன்ன பண்பின னாகி
 
                    (இதுவுமது)
              41 - 49 : பூ ............ என
 
(பொழிப்புரை) அதுகேட்ட தருசக மன்னன் மலர் பரப்பிய அவ்வரண்மனை முற்றம் பொலிவுறும்படி சென்று அச் செய்தியைக்  கூறியவர்களைப் பார்த்து நீவிர், இச் செய்தியை உண்மையாக அறிந்து வந்து நுமக்குக் கூறியவர்களை எமக்கு விரைந்து காட்டுக என்று பணியா நிற்ப, அதுகேட்ட அம் மாந்தர்கள் அந் நகரத்தின் அங்காடித் தெருக்கள்தோறும் இச் செய்தியை விளக்கிக்  கூறிக் கொண்டிருக்கும் வாட் போரில் வல்ல பெரிய கையையுடைய  வயந்தகனை அரசனுக்குக் காட்டி, ''சே! பகைவர் பாசறையகத்து நிகழ்ந்ததனை எஞ்சாமல் அறிந்து பெருமான்பால் உணர்த்துதலே தன்னுடைய காரியமாக மேற்கொண்டு ஈண்டு வந்துள்ளான் இவன்''ன்று கூறா நிற்ப, அதுகேட்ட அத்தருசக  மன்னன் அவ் வயந்தகனைப் பருகுபவன் போன்று பெரிதும் விரும்புவானாய்; என்க.
 
(விளக்கம்) பூப்புரி முற்றம் - மலரால் அழகுறுத்தப்பட்ட முற்றம். வாய்ப் பொருள் - உண்மையாய பொருள். காவலன் : தருசகன். அங்காடி - கடைத்தெரு, உட்பட்டது - பகைவர் பாசறையுள் நிகழ்ந்தது. இவன் என்றது, வயந்தகனை. பருகுவன்ன பண்பு - நீர்வேட்டோர் அந் நீரீன்பாற் கொள்ளும் ஆர்வம் போன்ற பேரார்வம் என்க.