பக்கம் எண் :

பக்கம் எண்:31

உரை
 
3. மகத காண்டம்
 
2. மகதநாடு புக்கது
 
           குன்றயற் பரந்த குளிர்கொ ளருவி
           மறுவின் மானவர் மலிந்த மூதூர்
           வெறிது சேறல் விழுப்ப மன்றெனக்
           கான வாழைத் தேனுறு கனியும்
    30     அள்ளிலைப் பலவின் முள்ளுடை யமிர்தமும்
           திரடாண் மாஅத்துத் தேம்படு கனியும்
           வரைதாழ் தேனொ டுகாய்விரை சூழ்ந்து
           மணியுமுத்து மணிபெற வரன்றிப்
           பணிவில் பாக்கம் பயங்கொண்டு கவரா
    35     நிறைந்துவந் திழிதரு நீங்காச் செல்வமொடு
 
                (அருவி)
         26 - 35; குன்று...........செல்வமொடு
 
(பொழிப்புரை) மலைகளின் பக்கத்தே பரவி வீழாநின்ற குளிர்ச்சியுடைய அருவிகள்,
  குற்றமற்ற சான்றோராகிய மக்கள் மிக்க பழைதாகிய ஊரின்கண்ணே செல்வோம்
  அவர்க் காங்கையுறையோடு செல்வதல்லது வறிதே செல்லுதல் சிறப்பாகாது என்று
  கருதிக்காட்டு வாழையினது தேனொழுகக் கனிந்தகனிகளையும், பெரிய இலைகளையுடைய
  பலாமரத்தினது முள்ளுடைய அமிழ்தனைய கனிகளையும், திரண்ட அடியையுடைய
  மாமரத்தினது இனிமைமிக்க கனிகளையும், மலையிலே தூங்காநின்ற தேனிறாலையும்
  சுமந்துகொண்டு, மேலும்உகாய் மரத்தின் நறுமணத்தையும்   அளாவிக்கொண்டு
  மாணிக்கம் முத்து முதலிய மணிகளையும் அழகுற வரன்றிக் கவர்ந்துகொண்டு,
  தாழ்வில்லாத பாக்கங்ளிலே இப்பயன்தரு பொருள்களைக் கொண்டு் நிறைந்து வந்து
  பாயா நின்ற நீங்குதலில்லாத செல்வங்களோடே என்க.
 
(விளக்கம்) மானவர் - மக்கள். வெறிது. - வெறுங்கையோடு, விழுப்பம் - சிறப்பு.
  வாழை,மா,பலா என்னும் முக்கனியையும் கூறியது காண்க. முள்ளுடையமிர்தம் -
  பலாக்கனி. உகாய்- ஒரு நறுமணமுடைய மரம் .விரை- மணம். பணி- தாழ்வு.
  பயங்கவரா, கொண்டு இழிதரும் என்க. கவரா - கவர்ந்து.