பக்கம் எண் :

பக்கம் எண்:310

உரை
 
3. மகத காண்டம்
 
18. தருசகனோடு கூடியது
 
           வீணைந வின்ற விறல்வே லுதயணன்
           இவண்வரப் பெற்றேன் றவமிக வுடையெனென்
     60    றேத மின்மையு நீதியும் வினாஅய்
           இன்னா மன்ன ரிகலடு பெரும்படை
           தாக்கிய வாறுந் தகர நூறிப்
           போக்கிய வாறும் போந்த வண்ணமும்
           முறைமையிற் கேட்டு நிறைநீர் வரைப்பிற்
 
                    (இதுவுமது)
              58 - 64 : வீணை............கேட்டு
 
(பொழிப்புரை) மேலும் யாழ்வித்தை பயின்று புகழ்படைத்த வெற்றிவேல் ஏந்திய அவ்வுதயண மன்னன் தானே இந்நகரத்திற்கு வரப்பெற்றேன். ஆதலால் யான் பண்டு தவம் மிகவும் செய்துடையேன் போலுமென்று கூறித் தன் மகிழ்ச்சியையும் அவ்வயந்தகனுக்கு உணர்த்தி அம்மன்னனுடைய உடல் நலம் முதலியவற்றையும் செங்கோல் நலத்தையும் வினவிப் பின்னர்த் தனக்கு இன்னாமை செய்தற்கு வந்த விரிசிகன் முதலிய மன்னருடைய போராற்றல் மிக்க பெரிய படையினை உதயணன் மறவர் தாக்கிய முறைமையினையும் அப்படை சிதர்ந்து போகும்படி போராற்றி ஓட்டிய முறைமையினையும் மீண்ட முறைமையினையும் முறையே கேட்டு, என்க.
 
(விளக்கம்) நவின்ற - பழகிய. விறல் - வெற்றி. இவண் - இந்நகரத்திற்கு. ஏதமின்மை - உடல்மனம் இவற்றிற்குத் தீங்கில்லாமை. நீதி - செங்கோல் முறைமை. இகல் - போர்.