பக்கம் எண் :

பக்கம் எண்:316

உரை
 
3. மகத காண்டம்
 
18. தருசகனோடு கூடியது
 
           உஞ்சையம் பெரும்பதி யுழக்குபு கொல்லும்
           வெஞ்சின வேழத்து வெகுட்சி நீக்கிப்
           பல்லுயிர்ப் பருவர லோம்பிய பெருமகன்
     100    மல்லற் றானை வத்தவர் கோமாற்
           கொன்னா மன்ன ருடல்சின முருக்கி
           இன்னா நீக்கலு மேயர் குலத்தோற்
           கியைந்துவந் ததுவென வியந்துவிரல் விதிர்த்துப்
           பக்க மாக்க டத்தமு ளுரைக்கும்
     105    உறுபுகழ்க் கிளவி சிறிய கேளாத
 
        (தருசகன் உதயணனை உபசரித்து இருக்கச் செய்தல்)
                 97 - 105: உஞ்சை.........கேளா
 
(பொழிப்புரை) ஆங்குக் குழுமியுள்ள மக்கள் உதயணனைக் கண்டு மகிழ்ந்து ஏயர் குலத் தோன்றலும் வளமுடைய படைகளையுடைய வத்தவ நாட்டு மன்னனுமாகிய இப் பெருமகன் பண்டு உஞ்சை மாநகரத்தின் வீதியின்கண் வெறிகொண்டு மாந்தரைக் கொன்ற வெவ்விய சினத்தையுடைய நளகிரி என்னும் களிற்றியானையினது சினத்தை யாழினாலே யகற்றி, அங்கு வாழுகின்ற பல்வேறு உயிர்களினது துன்பத்தைப் போக்கிப் பாதுகாத்தருளினன். அத்தகையோனாகையாலே இற்றை நாளும் இந் நகரத்தை முற்றுகையிட்ட பகை மன்னர்களுடைய போருக்குக் காரணமான வெகுளியை அவித்து இந் நகர்வாழ் மக்களினது துயரத்தினை அகற்றுதலாகிய நற்செயலும் இவனுக்குப் பொருந்தி வந்தது ; என்று கூறி வியந்து; கையை அசைத்துக்கொண்டு தமக்குள்ளே ஒருவரோடொருவர் மெல்லப் பேசிக்கொள்ளுகின்ற மிகுந்த புகழாகிய மொழியினை அவ்வுதயண மன்னன் கேட்டும் கேளாதவனாய்; என்க.
 
(விளக்கம்) உஞ்சையம் பெரும்பதி - அவந்தி நாட்டுத் தலைநகர். உழக்குபு - உழக்கி. வெஞ்சின வேழமென்றது, நளகிரியை. பருவரல் - துன்பம். வத்தவர் கோமான் : உதயணன். ஒன்னாமன்னர் : விரிசிகன் முதலிய பகை மன்னர். உடல் சினம் : வினைத்தொகை. விரல் - கை ; மகிழ்ச்சியுற்றோர் கையை அசைத்தல் இயல்பு. பக்க மாக்கள் - பக்கத்திலிருக்கும் மக்கள். உறுபுகழ்க்கிளவி - மிக்க புகழை உணர்த்தும் சொல். சிறிய கேளா என்றது தன் புகழாதலின் கேட்க நாணிக் கேளானாயிருந்தும் அம்மொழி செவிப் புகுதலால் ஓராற்றான் கேட்டும் என்றவாறு.