பக்கம் எண் :

பக்கம் எண்:32

உரை
 
3. மகத காண்டம்
 
2. மகதநாடு புக்கது
 
           சிறந்த சீர்த்திக் குறிஞ்சி கோலிக்
           கல்லென் சும்மையொடு கார்தலை மணந்த
           முல்லை முதுதிணைச் செல்வ மெய்திப்
           பாலையு நெய்தலும் வேலி யாகக்
    40     கோல மெய்திக் குறையா வுணவொடு
           துறக்கம் புரியுந் தொல்லையி னியன்றது
           பிறப்பற முயலும் பெரியோர் பிறந்தது
           சிறப்பிடை யறாத தேசிக முடையது
           மறப்பெருந் தகையது மாற்றோ ரில்லது
    45     விறற்புக ழுடையது வீரிய மமைந்த
 
                 மகத நாட்டின் சிறப்பு
              36 - 45 : சிறந்த............அமைந்தது
 
(பொழிப்புரை) சிறந்த பெரும்புகழையுடைய குறிஞ்சி வளத்தையும்
  அந்நிலத்திலே கால்கொண்டு சூழப்பட்டுக் கல்லென்னும் ஆரவாரத்
  தோடு முகில் சென்று பெயலை மேற்கொண்ட முல்லையாகிய
  பழைய நிலத்திலுண்டாகிய வளங்களையும் பெற்று ஒருபால் பாலை
  நிலத்தையும் மற்றொருபால் கடலும் கடல் சார்ந்த நிலமும் ஆகிய
  நெய்தலையும் தனக்குப் பாதுகாவலாகும் வேலியாகப் பெற்று
  ஐந்திணையழகும் பெற்று என்றும் குறையாத உணவுப்பொருட் பெருக்கத்
  தோடு துறக்கத்தே வாழும் தேவரும் விரும்புமாறு மிகப் பழங்காலத்தேயே
  தோன்றியதும், அன்றியும் பிறப்பின்னாதென் றுணரும் பேரறிவோடுதோன்றிப்
  பிறப்பறுதற்குக் காரணமான துறவற நெறியிலே நிற்கும் பெரியோர் பலரும்
  பிறத்தற்கிடனானதும், இடையறவில்லாதபுகழையும் ஒளியையும் உடையதும்,
  மறப்பண்புடைமையிற் பெருந்தகைமையுடையதும், எஞ்ஞான்றும். தன்னை
  வென்றடிப்படுத்தும் பகைவரை இல்லாததும், பிறநாட்டை வெறறிகொண்டமையாலே
  எக்காலத்தும் புகழுடையதும் அதற்கேற்ற மறப்பண்பமைந்ததும் என்க.
 
(விளக்கம்) சீர்த்தி - மிகுபுகழ். சும்மை- ஆரவாரம்- முதுதிணை - பழைமையான
  நிலம். துறக்கம்-தேவர் . தொல்லை -பழைமை பெரியோர் ஈண்டுத் துறவோர்.
  தேசிகம்-.ஒளியுடைமை மறப்பெருநதகை. மாசில்லாத வீரப்பண்பு. மாற்றோர் -
  பகைவர் விறல்-வெற்றி வீரியம்-ஆண்மைத் தன்மை.