பக்கம் எண் :

பக்கம் எண்:322

உரை
 
3. மகத காண்டம்
 
19. படை தலைக்கொண்டது
 
         
     25    வேந்தனில் வந்தோர் வினவுதல் வேண்டா
           அமர்மேற் கொண்டோர் யாரே யாயினும்
           தமராக் கருதித் தம்வயிற் றெளிதல்
           ஏல்வன் றென்ன மேலவை கிளவா
           இளிவஞ்சு முனிவரே யாயினு மற்றினித்
     30    தெளிவஞ்சு தகைத்தெனத் தெளிவுமுந் துறீஇ
           வஞ்சினஞ் செய்து வெஞ்சினம் பெருகக்
           கெடுத்த லூற்றமொடு கடுத்தன ராகிப்
           பெயர்த்தும் பெரும்படை தொகுத்தனர் கொண்டு
 
                       (இதுவுமது)
           25 - 33 : வேந்தனில் ......... கொண்டு
 
(பொழிப்புரை) அதுகேட்ட வேறு சிலர் இனி நம் பகை வேந்தன் படைஞருள் வைத்து நம்பால் வந்தவர் யார் என்று வினவுதலும் வேண்டா! எற்றுக்கெனில் போரினை மேற்கொண்ட அரசர்கள் தம்பால் வருவார் யாவரேயாயினும் கேளிராகக் கருதித் தம் மனத்தே அவரைத் தெளிந்துகோடல் இயல்பன்று. யாம் அங்ஙனமின்றி அவ் வணிகரை நமராகத் தெளிந்தது நம் குற்றமேயாகலான்
என்று கூறாநிற்ப. அதுகேட்ட பின்னர் அவ்வவையோர் தாம் கேட்டதொன்றனை வெளியிட்டுக் கூறாதவரும், பழிக்குப் பெரிதும் அஞ்சுபவரும் ஆகிய துறவோரே நம்பால்வரினும் இனியாம் அவரைத் தெளிந்து கோடல் அஞ்சுதற்குரியதொரு செயலேயாகும், ஆதலின் இனி யாரையும் யாம் தெளிந்து கொள்வேமல்லேம் என்னும் முடிவுடன் தம்முள் ஒவ்வொருவரும் முற்பட்டு வஞ்சினங் கூறி வெவ்விய வெகுளி பெருகும்படி பகைவரைக் கெடுத்தற்குரிய ஊக்கத்தோடும் அச் செயலின்கண் மிகுவோராய் மீண்டும் பெரிய படைகளைத் திரட்டிக்கொண்டு; என்க.
 
(விளக்கம்) வேந்தனில் - தருசகனுடைய. யாரேயாயினும் - தம்பால் வருபவர் யாவராயினும்: தமரா - உற்றாராக. கிளவா - வாய் பேசாத எனினுமாம். இளிவு - பழிச் சொல். அஞ்சுதகைத்து - அஞ்சும் தன்மையுடைத்து. முந்துறீஇ - முற்பட்டு. வஞ்சினம் - சூண்மொழி. அஃதாவது இன்னது செய்யேனாயின் இன்னன் ஆவேன் என்பதுபடத் தெய்வச் சான்றொடு கூறல், ஊற்றம் - ஊக்கம். கடுத்தனர் - மிகுவோர்.