பக்கம் எண் :

பக்கம் எண்:325

உரை
 
3. மகத காண்டம்
 
19. படை தலைக்கொண்டது
 
         
     50    கூட்டம் பெருக்கி மீட்டுவந் தனரெனின்
           ஆற்ற லெல்லா மளந்தபி னல்ல
           தூக்க மிலரெனத் தூக்க மின்றி
           மனத்தி னெண்ணி மற்றது கரந்து
           சினத்த நோக்கமொடு சீறுபு வெகுண்டு
     55    செருவுடை மன்னரைச் சென்றுமே னேருங்குதும்
           பொருபடை தொகுத்துப் போதுகென் றேவலின்
 
                   (இதுவுமது)
            50 - 56 : கூட்டம்.........ஏவலின்
 
(பொழிப்புரை) விரிசிகன் முதலிய அப் பகை மன்னர்கள் தம் படையைப் பெருக்கிக்கொண்டு மீண்டும் வந்தனராயின் அவர் நம்முடைய படைவலி துணைவலி முதலிய வலிமையையெல்லாம் ஒற்றர் வாயிலாய் அறிந்து அளந்து அதன் எல்லையைக் கண்டு கொண்ட பின் அல்லது அங்ஙனம் வருவதற்கு ஊக்கம் உடையர் ஆகார் என்று கருதி ஊண் உறக்கமின்றித் தன் மனத்தின்கண் எண்ணி எண்ணி அக் கருத்தினை மற்றையோர் அறிந்துகொள்ளாதபடி மனத்தின்கண் அடக்கிக்கொண்டு மற்றை நாள் தன் படைத்தலைவர் முன்னிலையில் அப் பகைவரைச் சினந்த நோக்கத்தோடு பெரிதும் சீறி வெகுண்டு நம்மேல் வந்த அப் போர்த்தொழிலுடைய பகையரசர்களை யாமும் சென்று எதிர்ப்போம்! அதற்கு நம்முடைய போர்ப் படைகளை ஒரு சேரத் திரட்டிச் செல்வீராக என்று ஏவுதலாலே என்க.
 
(விளக்கம்) கூட்டம் - படை. ஆற்றல் - படை வலி துணைவலி முதலியன. அது - அக் கருத்தினை. நெருங்குதும் - எதிர்ப்பேம்.