பக்கம் எண் :

பக்கம் எண்:327

உரை
 
3. மகத காண்டம்
 
19. படை தலைக்கொண்டது
 
           வணங்கார் வணக்கிய வத்தவர் பெருமகன்
           நுணங்குபொரு ளமைச்சரொ டுணர்ந்தன னாகிக்
           கண்ணிய பொருட்குத் திண்ணியது தெரிய
     65    உறுப்போ ரன்ன வுள்பொரு ளமைச்சரும்
           மறப்போர் மன்னனு மாணவே றிருந்து
           செயற்படு கருமத் தியற்கை யிற்றெனப்
           பெயர்த்தும் வருபடை யழிப்பது வலித்து
           வயந்தக குமரற் கியைந்தது கூறும்
 
                     (உதயணன் செயல்)
               62 - 69 : வணங்கார்.........கூறும்
 
(பொழிப்புரை) தன் பகைவரை வணக்கிய வத்தவர் கோமானாகிய உதயண மன்னன் நுணுகிய பொருளையும் ஆராய்ந்துணரும் ஆற்றலுடைய அமைச்சர்களோடு இச் செய்தியை உணர்ந்தவனாய்த் தான் கருதிய செயலுக்கு ஆக்கமாகும் செயலைத் தெரிந்துகோடற்குத் தனது உறுப்பினுள் வைத்துச் சிறந்த உறுப்பாகியகண் போன்றவரும் மெய்ப் பொருளை உணர்பவருமாகிய தன் அமைச்சரும் மறமிக்க போராற்றலுடைய அவ்வுதயண மன்னனும் மாட்சிமையுறத் தனி இடத்தே கூடி இருந்து இப்பொழுது காரியப்படுகின்ற செயலின் இயல்பு இத்தகைத்து என்றும், மீண்டும் வருகின்ற அப் பகைப் படையை, மீண்டும் அழிப்பதனைத் துணிந்தும், வயந்தக குமரனை நோக்கி அப்பொழுதைக்கு இயைந்த செயலொன்றனைக் கூறுவான்; என்க..
 
(விளக்கம்) வணங்கார் - பகைவர். நுணங்கு பொருள் - நுணுகிய பொருள். கண்ணிய பொருட்குத் திண்ணியது - தாம் நினைத்த காரியம் நிறைவேறற்குரிய உறுதியான செயல்; தாம் நினைத்த காரியமாவது : பதுமாபதியை மணந்துகொண்டு தருசகனுடைய கேண்மையைப் பெறுதல் என்க. உறுப்பு - ஈண்டுக் கண்ணென்க. இயைந்தது : அப்பொழுதைக்குப் பொருந்திய செயல்.