பக்கம் எண் :

பக்கம் எண்:330

உரை
 
3. மகத காண்டம்
 
19. படை தலைக்கொண்டது
 
           என்னி னாதற் கிசைகுவ தாயிற்
           பின்ன ரறிய பிறபொருள் வலித்தல்
           யான்சென் றிரியினஃ தறிகுந ரில்லைத்
     85    தான்சென் றுறுவழித் தளர்ந்த காலை
           மகத மன்னனை மலைந்துவென் றனமென
           மிகுதி மன்னர் மேல்வந்து நெருங்கின்
           என்னா மன்ன தின்னாத் தரூஉம்
           எடுத்துநிலை யரிதென வேதுக் காட்டி
     90    என்குறை யாக வொழிக வெழுச்சி
 
                  (இதுவுமது)
            82 - 90 : என்னின்.........எழுச்சி
 
(பொழிப்புரை) ''இப் போர் என் பொறுப்பிலே நிகழ்தற்கு நீ இசைகுவது ஆயின், அப்போர் நிகழ்ந்த பின்னர் நீ அதுபற்றி அறிந்துகொள்க. இதுபற்றி இப்பொழுது வேறு செயல்களைச் செய்தற்குத் துணிதல் வேண்டா! இனி யான் அப்பகைவர் மேற்சென்று போர் செய்துழி அவர் தோல்வியுற்றால் அஃது என் செயலாகக் கருதுவார் இல்லை. நின் செயலே என்று உலகம் உணரும் அல்லவோ? அங்ஙனமின்றி நீயே படைகூட்டி அவர் மேற்சென்று போரிட்ட காலத்தே ஒரோவழி நீ முதுகு காட்ட நேருமாயின் அப் பகை மன்னர் யாங்கள் மகத மன்னனைப் போரின்கண் வென்றேம் என்று செருக்கி ஊக்கமுடையராய்ப் பின்னரும் படை கூட்டி நின்மேல் வந்து போர்தொடுப்பார். அங்ஙனமாயின் நின்னிலை யாதாகும். அந் நிலைமை பெரிதும் துன்பம் தருவதொன்றாம் அன்றோ? அவ் வீழ்ச்சியைப் பின்னர் எடுத்து நிறுத்துதல் அரிதாகும்.அன்றோ'', என்று வயந்தக, நீயே காரணங்களையும் எடுத்துக் காட்டி எனது வேண்டுகோளாகக் கூறி நீயே பகைவர் மேல் போர்க்கெழுதல் ஒழிக என்றும் கூறி, என்க.
 
(விளக்கம்) வலித்தல் - துணியாதே கொள்; அல் ஈற்றுவியங்கோள். தான் - நீயே. மலைந்து - போர் செய்து. மிகுதி மன்னர் - மிகைச் செயலையுடைய பகையரசர். என்னாம் - யாதாகும். எடுத்து நிலை - எடுத்து நிறுத்துதல். குறை - வேண்டுகோள்.