பக்கம் எண் :

பக்கம் எண்:331

உரை
 
3. மகத காண்டம்
 
19. படை தலைக்கொண்டது
 
           தன்படை யெல்லாந் தருக வென்னொடும்
           அடற்றொழில் யானைப் படைத்தொழில் பயின்றோர்
           எனைவ ருளரவ ரனைவரும் யானும்
           ஏறுதற் கமைந்த விருங்கவுள் வேழமும்
      95   வீறுபெறப் பண்ணி விரைந்தன வருக
           தன்பாற் படைக்குத் தலைவ னாகியோர்
           வன்பார் மன்னன் வரினு நன்றெனக்
           கூறினன் மற்றெங் கோமக னென்றவற்
           றேறக் காட்டி மாறுமொழி கொண்டு
     100    விரைந்தனை வருகெனக் கரைந்தவற் போக்க
 
                    (இதுவுமது)
            91 - 100 : தன்படை.........போக்க
 
(பொழிப்புரை) அப்பணி பெற்றவுடனே உண்மையன்றாயினும் தன்பால் வந்து கேட்போர் அம்மொழி மெய்ம்மையே என்று விரும்பி ஏற்றுக்கொள்ளும்படி பேசுகின்ற மேம்பாடுடைய சொல் வன்மையையுடைய அவ் வயந்தக குமரன் அத் தருசகன் திருமுன்னர்ச்சென்று இடம் பெற்றுத் தன் அரசனாகிய உதயணனுடைய மொழியையும் வேண்டுகோளையும் கூறாநிற்ப; என்க. ''உன்னுடைய படைகளை யெல்லாம் தன்பால் ஒப்புவித்திடுக என்றும், ஈண்டு என்னுடன் எத்தனை மறவர் இருக்கின்றனரோ அத்தனை மறவரும், யானும் ஏறிச் செல்லுதற்கு வேண்டிய பெரிய கவுளையுடைய யானைகளும் வீறுண்டாக ஒப்பனை செய்யப்பட்டு விரைந்து ஈண்டு வருவனவாக என்றும், நின்னுடைய படைக்குத் தலைவனாக ஆற்றல் பொருந்திய யாரேனும் ஒரு மன்னன் வரினும் நன்றே என்றும் எம்மரசன் கூறினன்'' என்று அத் தருசக மன்னன் தெளியும்படி எடுத்துக்காட்டி அம் மன்னவன் இவற்றிற்குக் கூறாநிற்கும் மறுமொழிகளையும் அறிந்துகொண்டு விரைந்து வருவாயாக என்று சொல்லி விடுப்ப; என்க.
 
(விளக்கம்) வீறு - வேறொன்றற்கில்லாத சிறப்பு. வன்பு - வலிமை. மறுமொழி - விடை. கரைந்து - சொல்லி.