பக்கம் எண் :

பக்கம் எண்:335

உரை
 
3. மகத காண்டம்
 
19. படை தலைக்கொண்டது
 
           வலிகெழு நோன்றாள் வத்தவன் வலித்ததும்
           கலிகெழு மைத்துனன் கருத்து நோக்கி
           முற்கிளை வேண்டுநர் மற்றவர்க் கியைந்த
           அற்றந் தீர்க்கினது பிற்பயம் பெருகும்
     120    அற்று மன்றிப் பற்றா மன்னர்
           மேல்வந் திறுப்ப வேல்பல படையொடு
           மாயா திருப்பிற் கிளையோ மற்றிவன்
           வேற்றா னெனவு மாற்றா னெனவும்
           போற்றா மன்னர் புறஞ்சொற் படுமெனக்
 
           (கேகயத்தரசன் எண்ணுதலும் தெரிவித்தலும்.)
                 116 - 124 : வலிகெழு.........என
 
(பொழிப்புரை) இனி இராசகிரிய நகரத்தின்கண் பதுமாபதியை மணந்துகோடற் பொருட்டு வந்து தங்கியிருந்த கேகயத்தரசனாகிய அச்சுவப் பெருமகன் ஆற்றலொடு புணர்ந்த வலிய முயற்சியினையுடைய வத்தவநாட்டு இறைவனாகிய உதயணகுமரன் எண்ணித் துணிந்த கருத்தினையும் அறிந்து தனக்குள் நினைப்பவன், ஒருவருடைய உறவினை விரும்புபவர் அவர்க்கு உண்டான சோர்வினைத் தீர்த்து விடுவராயின், அச் செயலால் பின்னர்ப் பயன் பெரிதும் பெருகுவதாகும். அதுவேயுமன்றி அவர்க்குப் பகை மன்னர்கள் போர் மேற்கொண்டு வந்து சூழ்ந்து கொள்வரேல் அச்சூழப்பட்டாருடைய பலவாகிய படைகளோடும் சென்று அவர் பொருட்டு அப்போரின்கண் இறந்துபடுதலே முறை; அங்ஙனம் இறவாதிருப்பின் அப்பகை மன்னர் இவனும் ஓர் உறவினனோ? அல்லன்! இவன் அவர்க்கு ஏதிலான் என்றும். பகைவன் என்றும் பழிகூறுதல் ஒருதலை என்று கருதி ; என்க.
 
(விளக்கம்) நோன்றாள் - வலியமுயற்சி. வலித்ததும் - துணிந்த கருத்தும். கலிகெழு மைத்துனன் - ஆரவாரமுடைய தருசகமன்னன். முற்கிளை - முற்பட்ட உறவு முறை. மற்றவர்க்கு - அவ்வுறவினர்க்கு. அற்றம் - சோர்வு. அது அச்செயலால். அற்றும் - அதுதானும். இருப்பவேல் - சூழ்ந்து கொள்வாராயின். போற்றாமன்னர், எனவும், எனவும், கூறும் புறஞ்சொல் என்க