பக்கம் எண் :

பக்கம் எண்:345

உரை
 
3. மகத காண்டம்
 
19. படை தலைக்கொண்டது
 
            பவ்வத் தன்ன படையமை நடுவண்
            வவ்வற் கெண்ணிய வத்தவ ரிறைவன்
            கெடலருஞ் சிறப்பிற் கேகயத் தரசனும்
            உடலுநர்க் கடந்த வுருமண் ணுவாவும்
     205    முன்ன ராக முன்னுக வென்னொடு
            பின்ன ராவோ ரின்னரென் றுரைத்துக்
            கூறுபடப் போக்கி வேறுபடப் பரப்பி
            எல்லை யிகந்த விருங்கடல் போலப்
            புல்லார் பாடியிற் குறுகலி னொல்லென
 
                     (உதயணன் புறப்பாடு)
                201 - 209 : பவ்வம்.........குறுகலின்
 
(பொழிப்புரை) கடல் போன்ற பெரும் படைகளமைந்த அப்போர்க்களத்தின் நடுவே பகைவரைக் கைப்பற்றிக் கோடற்குக் கருதிய உதயண வேந்தன், போர்க்களத்தின் கண் பிறக்கிடாத சிறப்பினையுடைய கேகய மன்னனாகிய அச்சுவப் பெருமகனும் நம் பகைவரைப் போராற்றி வென்ற உருமண்ணுவாவும், நம் படைக்குத்  தூசிப் படையினிடத்தே செல்வாராக என்றும், எனக்குப்பின்னுள்ள கூழைப் படையிடத்தே நிற்றற்கு உரியார் இன்னின்னர் என்றும் வகுத்துரைத்துத் தன் படைகளைக் கூறு கூறாக  வெவ்வேறிடத்திற் செலுத்திக் காண்போர்க்கு எல்லையற்ற பெருங்கடல் போல அப்படை தோன்றுமாறு பரப்பிக்கொண்டு அப்பகை மன்னருடைய பாசறையை அணுகா நிற்ப, என்க.
 
(விளக்கம்) பவ்வம் - கடல், வௌவற்கு - பகைவரைக் கைப்பற்றிக் கோடற்கு. கெடலரும் சிறப்பு - போர்க்களத்தில் புறங் கொடாத சிறப்பு. உடலுனர் - பகைவர். முன்னராக - தூசிப் படையிடத்தாராக; தூசிப்படை - முன்படை. முன்னுக - செல்லுக. பின்னராவோர் - கூழைப் படையிடத்து நிற்போர். இன்னர் - இன்னின்னர் ; இவர் இவர் ; கடல்போலத் தோன்றும்படி தன் படையைப் பரப்பி என்க.
           ''அடற்றகையு மாற்றலு மில்லெனினுந் தானை
            படைத்தகையாற் பாடு பெறும்'' (குறள் 768)
என்னும் திருக்குறளையும் ஈண்டு நினைக. புல்லார் - பகைவர், பாடி - பாசறை.