பக்கம் எண் :

பக்கம் எண்:349

உரை
 
3. மகத காண்டம்
 
20. சங்கமன்னர் உடைந்தது
 
           வணங்குசிலைச் சாபம் வார்கணை கொளீஇ
           நிணம்பட நெஞ்சமு நெற்றியு மழுத்திக்
     10    கைபுடை பரந்து கலங்கத் தாக்குநர்
           புடைநிரைத் தாரைக் கடிநீர்க் கைவாள்
           படையு நெருக்கிப்........................
           பாலிகை விளிக்கும் பண்ணமை பற்றினர்
           மாலையும் வயிரமு மூழூழ் பொங்கக்
     15    கால்வ லிளையர் கலங்கத் தாக்கவும்
 
                     (இதுவுமது)
              8 - 15 : வணங்கு.........தாக்கவும்
 
(பொழிப்புரை) இவருள் வைத்து வின்மறவர் தத்தம் வளைந்த விற்களை நாணேற்றி நெடிய அம்புகளைத் தொடுத்துத் தத்தம் பகைவர்களினது மார்பும் நெற்றியும் புண்படுமாறு அழுத்தா நிற்பவும், இனி எப்பக்கங்களிலும் பரவிப் பகைவர் மனங்கலங்கும்படி தாக்குவோராகிய நிரல் நிரலாகக் கூறிய கடிய நீர்மையையுடைய வாளேந்திய காலாட் படைஞரும் தத்தம் பகைவரை எதிர்ந்து............தத்தம் வாளினது பிடியை முறியச் செய்கின்ற பிடிப்பினையுடையராய்த் தத்தம் மாலைகளும் மறப்பண்பும் முறையே முறையே பொங்கி எழா நிற்பத் தத்தம் பகைவர் மனங்கலங்கும்படி தாக்கா நிற்பவும் ; என்க.
 
(விளக்கம்) சிலைச்சாபம் - சிலைமரத்தாற் செய்த வில். ''சிலை வல்வில்'' என்றார் கலியினும் (15) தாரை - கூர்மை. கடிநீர் - கடிய தன்மை. பாலிகை - வாட்பிடி. விளிக்கும் - முறியச் செய்கின்ற. பற்று - பிடிப்பு. "பாலிகை இடையறப் பிடித்த பாணியர்" (சீவக. 2217) வயிரம் - வீரப்பதக்கமுமாம். வயிரமணி பதித்த பதக்கம் என்க. கால்வல் இளையர் - காலாட்படைஞராகிய வலிமையுடைய இளமையுடைய மறவர்.