பக்கம் எண் :

பக்கம் எண்:353

உரை
 
3. மகத காண்டம்
 
20. சங்கமன்னர் உடைந்தது
 
           போர்க்கள வட்டங் கார்க்கட லொலியெனக்
           கடற்படைக் கம்பலை கலந்த காலை
     45    மடற் பனை யிடைத்துணி கடுப்பப் பல்லூழ்
           அடக்கரும் வேழத் தடக்கை வீழவும்
           வார்ப்பண் புதைஇய போர்ப்பமை வனப்பிற்
           றுடித்தலை போல வடித்தலை யறவும்
           சுற்றார் கருவிற் றுணியெனத் தோன்றி
     50    அற்ற மில்வா லற்றன கிடப்பவும்
 
                   (போர் நிகழ்ச்சி)
               43 - 50 : போர்.........கிடப்பவும்
 
(பொழிப்புரை) இவ்வாறு போர் நிகழா நின்ற அப் போர்க்கள வட்டத்தின்கண் கடல் போன்ற பெரிய அப்படைகளின் ஆரவாரம்  கரிய கடல் முழக்கம் போல எங்கும் எழுந்த காலத்தே அடக்குதற்கரிய யானைகளின் பெரிய கைகள் மடலையுடைய பனை மரத்தினது நடுத்துண்டு போலப் பல்வேறிடங்களினும் துணிந்து வீழாநிற்பவும், வாராற்கட்டப்பட்டுத் தோலாற் போர்த்தப்பட்டு  அழகமைந்த உடுக்கையினது தலை போன்று யானைகளின் கால்கள் அற்று வீழவும், சுற்றுதலமைந்த கரிய வில்லினது துண்டுகள் போலக் காணப்பட்டுச் சோர்வில்லாத அந்த யானைகளின் வால்கள் அங்கங்கே துணிபட்டுக் கிடவாநிற்பவும் என்க.
 
(விளக்கம்) களவட்டம் - களத்தினது வட்ட வடிவமான பரப்பு. கார்க்கடல் - கார்ப்பருவத்துக் கடலுமாம். கம்பலை - ஆரவாரம். மடற்பனை - மடலை யுடையபனை. இடைத்துணி - நடுத்துண்டு. கடுப்பு : உவம உருபு. தடக்கை - பெரிய துதிக்கை. வார்ப் பண்பு தைஇய. வாராற்கட்டப் பட்ட. போர்ப்பமை - தோல் போர்வையமைந்த. துடித்தலை - உடுக்கையின் கண். இது யானைக்கால்களுக்கு உவமை. விற்றுணி - வில்லினது துண்டுகள். அற்றம் - சோர்வு.