பக்கம் எண் :

பக்கம் எண்:355

உரை
 
3. மகத காண்டம்
 
20. சங்கமன்னர் உடைந்தது
 
           பூணேற் றகன்ற புடைகிள ரகலத்துத்
           தாமேற் றழுத்திய சத்தி வாங்கிப்
           புரைசை யுய்த்த பொருகழற் காலினர்
     65    வரைமிசை மறிநரின் மறப்படை திருத்தி
           வெம்முரண் வேழம் வீழ்த்து மாற்றார்
           தம்முயிர் நீங்கத் தாழ்ந்தனர் வீழவும்
 
                    (இதுவுமது)
               62 - 67 : பூண்.........வீழவும்
 
(பொழிப்புரை) அணிகலன்களைத் தாங்கி விரிந்த பக்கங்களுயர்ந்த தம் மார்பின் கண் தாம் தம் பகைவரை எதிர்ந்துழி அவர் எறிந்த வேலினை ஏற்றுக் கொண்டு பின்னர் அவ்வேலினைக் கையாற் பறித்துத் தாமேறிய யானையினது புரசைக் கயிற்றின்கண் செலுத்திய போர் செய்தற்கு அறிகுறியான வீரக் கழலையணிந்த  காலினையுடையராய் மலையினின்றும் இறங்குவார் போலக் கீழிறங்கித் தம்முடைய கையகத்திருக்கும் அவ்வேற் படையின் வளைவை நிமிர்த்துத் தம்முடைய பகைவரது வெவ்விய வலியினையுடைய களிற்றியானையை அவ்வேலான் எறிந்து கொன்று வீழ்த்து அந்த யானையின் மேலிருந்த அம் மாற்றார் உயிர் நீங்குதலைக் காண்டற்குச் சிறிது பொழுது நின்று அவர் இறந்த பின்னர்த் தாமும் வீழ்ந்து இறவா நிற்பவும்; என்க.
 
(விளக்கம்) பூண் - அணிகலன். புடை - பக்கங்கள். அகலத்து - மார்பில். தாம் ஏற்றுழி பகைவர் அழுத்திய சக்தி என்க. ''கைவேல் களிற்றொடு போக்கி வருபவன், மெய்வேல் பறியா நகும்'' (திருக்குறள்  - 774) என்னுந் திருக்குறளும் காண்க. புரைசை - யானைக் கழுத்திற் கட்டும் கயிறு. மறிநரின் - கவிழ்பவரைப் போல, படை திருத்தி - படையின் வளைவை நிமிர்த்து.