பக்கம் எண் :

பக்கம் எண்:356

உரை
 
3. மகத காண்டம்
 
20. சங்கமன்னர் உடைந்தது
 
           அடுத்தெழு பெருந்திரை யகன்கட னடுவண்
           உடைத்த நாவாய்க் கடைத்தொடை தழீஇ
     70    இடைத்திரைக் கணவரூஉ மெழுச்சி யேய்ப்ப
           வாக்கமை பிடிவார் வலித்த கையினர்
           ஊற்றமில் புரவித் தாட்கழி வாகிய
           குருதிப் புனலிடைக் கருதியது முடியார்
           மாவொடு மறிந்து மயங்கி வீழவும்
 
                    (இதுவுமது)
               68 - 74 : அடுத்து.........வீழவும்
 
(பொழிப்புரை) அடுத்து அடுத்து எழா நின்ற பெரிய அலைகளையுடைய அகன்ற கடலிடையே உடைபட்ட தோணியினது இறுதியிற் கட்டப்பட்டுள்ள கயிற்றைப் பற்றிக் கொண்டு இடை இடையே வருகின்ற அலைகளுக்கு அண்ணாத்தல் செய்கின்றவருடைய எழுச்சியை யொப்ப ஊக்கமில்லாத தம்முடைய குதிரைகளின் கால்களுக் கெட்டாத குருதி வெள்ளத்தின்கண் அக்குதிரைகளினது திருத்தமமைந்த கடிவாளவாரினைப் பற்றியகையையுடையராய்த் தாம் கருதிய காரியத்தைச் செய்து முடியாராய் அக்குதிரைகளோடு புரண்டு மயங்கி அக் குருதி வெள்ளத்தில் வீழாநிற்பவும்; என்க.
 
(விளக்கம்) அடுத்தடுத்து எழுகின்ற திரை என்க. உடைபட்ட நாவாய் என்க. நாவாய் - தோணி. கடைத்தொடை - இறுதியிற் கட்டப்பட்டுள்ள கயிறு. அணவரூஉம் - அண்ணாத்தல் செய்கின்ற. வாக்கு - திருத்தம். பிடிவார் - கடிவாள வார். ஊற்றம் - ஊக்கம். தாட்கு அழிவு ஆகிய குருதிப் புனல் - கால்களுக்கெட்டாத குருதி வெள்ளம். மா - குதிரை. மறிந்து - புரண்டு.