பக்கம் எண் :

பக்கம் எண்:358

உரை
 
3. மகத காண்டம்
 
20. சங்கமன்னர் உடைந்தது
 
         
     80    கால்வல் புரவியுங் கடுங்கண் யானையும்
           வேல்வ லிளையரும் விழுந்துகுழம் பாகிய
           அள்ளற் செஞ்சே றுள்ளோ ருழக்கலிற்
           றுப்புநிலத் தெழுந்த துகளென மிக்கெழுந்
           தந்தர விசும்பி னந்தியிற் பரப்பவும்
     85    தெரிவருங் குணத்துத் திசைதொறும் பொருந்தப்
           போர்வலம் வாய்த்த பொங்கம ரழுவத்து
 
                     (இதுவுமது)
               80 - 86 : கால்.........அழுவத்து
 
(பொழிப்புரை) கால் வலிமையுடைய குதிரைகளும் தறுகண் யானைகளும் வேற்படை வல்ல மறவர்களும் இறந்து வீழ்ந்து குழம்பாகிய அள்ளலாகிய சிவந்த சேறு, எஞ்சியுள்ள படைமற வீரர்கள் துவைத்தலாலே செந்நிலத் தெழுந்த துகள் போன்று மிகுந்து எழுந்து அந்தரமாகிய வானத்தின்கண் அந்தி மாலைப் பொழுதின் செவ்வானம் போல யாண்டும் பரவா நிற்பவும், குணந்தெரிதற்கரிய திசைகள் தோறும் புகழ் சென்று பொருந்தும்படி போர்வெற்றி வாய்த்த சினமிக்க அப்போர்க் களத்தின் கண்; என்க.
 
(விளக்கம்) கால் - காற்றுமாம். கடுங்கண் - தறுகண். அள்ளல் ஆகிய செஞ்சேறு என்க. உள்ளோர் - எஞ்சியுள்ள மறவர். துப்பு நிலம் - செந்நிலம். அந்தர விசும்பு : இரு பெயரொட்டு. அந்தியில் - அந்திச் செவ்வானம் போல. குணம் தெரிவருந்திசை என்க. அமர் அழுவம் - போர்க்களப்பரப்பு.