பக்கம் எண் :

பக்கம் எண்:359

உரை
 
3. மகத காண்டம்
 
20. சங்கமன்னர் உடைந்தது
 
          வார்தளிர்ப் படலை வத்தவர் பெருமகன்
          எலிச்செவி யரசன் றம்பி யேறிய
          கொலைப்பெருங் களிற்றி னெருத்தத்துப் பாய்ந்தவன்
    90    தம்முன் காணத் தலைதுமித் திடாது
          நின்னின் முடியுமெங் கரும மீண்டெனக்
          கடுத்த கட்டுரை யெடுத்தனன் கச்சிற்
          றிண்டோள் கட்டிய வென்றி நோக்கி
 
              (உதயணன் முதலியோர்செயல்)
                87 - 93 : வார்.........நோக்கி
 
(பொழிப்புரை) நெடிய தளிராலியன்ற மாலையினையுடைய வத்தவமன்னனாகிய உதயணன் பகைமன்னருள் வைத்து எலிச்செவியரசனுடைய தம்பி ஏறிய கொலைத் தொழிலையுடைய பெரிய களிற்றியானையின் பிடரின்கண் தாவி அவனுடைய தமையன் காணும்படி அவனுடைய தலையினை அரிந்திடாமல், ''ஏடா - நின்னைக் கைப்பற்றுவதனாலே எங்கள் காரியம் இங்கு நன்கு நிறைவேறுவதாம்'' என்று அச்சந்தரும் ஒரு மொழியை எடுத்துக் கூறிக் கச்சினாலே அவனது திண்ணிய தோளைப் பிணித்த வெற்றிச் செயலைக் கண்கூடாகப் பார்த்தும்; என்க.
 
(விளக்கம்) வார் - நெடிய. தளிர்ப்படலை - மலரோடு தளிர் விரவிப் புனைந்த மாலை. எருத்தத்து - பிடரியின்கண். தம்முன் - தமையன். துமித்திடாது - துணித்திடாமல். கடுத்த கட்டுரை - அச்சந்தரும் மொழி; நோக்கியும் என்க.