பக்கம் எண் :

பக்கம் எண்:362

உரை
 
3. மகத காண்டம்
 
20. சங்கமன்னர் உடைந்தது
 
          வென்றோ னேறிய வேழஞ் சார்ந்தவன்
          ஆற்றற் றன்மைய னாதலிற் றம்பி
          சிறைகொளப் பட்ட செல்ல னோக்கி
    110    உறைகழி வாளின னுருமண் ணுவாவின்
          மத்த யானை மருங்கிற் குப்புற்
          றொள்வா ளோக்கி யெள்ளுந ரோட்டிய
          எம்பி யுற்ற வின்னாச் சிறைவிடின்
          உய்ந்தனை யாகுதி யஞ்ச னீயென
    115    ஆர்ப்பக் கண்டே யடுதிற லுதயணன்
 
                    (இதுவுமது)
            107 - 115 : வென்றோன்.........ஆர்ப்
 
(பொழிப்புரை) பின்னர் ஆண்டுப் பகைவர்களை வென்று வெற்றியோடு நின்ற உருமண்ணுவா ஏறிய களிற்றியானையைச் சார்ந்து அவன்றானும் பேராற்றல் படைத்த மறவனாதலின் அவனோடு போர் செய்தலை விரும்பித் தன் தம்பி உதயணனால் சிறை கொளப்பட்ட துன்ப நிகழ்ச்சியைக் கருதி அதற்கு ஈடாக உறையினின்றும் கழித்த வாளையுடையவனாய் அவ்வுருமண்ணுவாவின் மதச் செருக்குடைய யானையினது பக்கத்தே குதித்துத் தனது ஒளி வாளை உயர்த்தி அவ்வுருமண்ணுவாவைப் பற்றிக் கொண்டவனாய், ''ஏடா ! எம் பகைவர்களை யெல்லாம் புறங்கண்ட என் தம்பி அகப்பட்டுள்ள இன்னாமையுடைய சிறைவிடப்படின் நீயும் உயிர்தப்புவாய் அஞ்சேல்'' என்று கூறி ஆரவாரியா நிற்ப; என்க.
 
(விளக்கம்) வென்றோன் : உருமண்ணுவா. அவன் : அவ்வுரு மண்ணுவா. ஆற்றற்றன்மையனாதலின் அவனோடு போர் செய்தலை விரும்பி எனச் சில சொற்கள் பெய்து கொள்க. செல்லல் - துன்பம். அதற்கீடாக என வருவித் தோதுக. குப்புற்று - குதித்து. ஓக்கி - உயர்த்திக் கைப்பற்றிக்கொண்டவனாய் எனச் சில சொற்கள் பெய்க. எள்ளுனர் : பகைவர். எம்பி - என் தம்பி. சிறைவிடின் உய்ந்தனை யாகுதி என்றது, விடாக்கால் கொல்லப்படுபவைஎன்பதுபட நின்றது. உய்தற்கு வழிகாட்டினமையின் நீ அஞ்சல் என்றான்.