பக்கம் எண் :

பக்கம் எண்:363

உரை
 
3. மகத காண்டம்
 
20. சங்கமன்னர் உடைந்தது
 
         
    115    ஆர்ப்பக் கண்டே யடுதிற லுதயணன்
          தாக்கருந் தானைத் தருசகன் றன்னொடு
          வேற்றுமை யிலனிவன் போற்றினை யாயிற்
          பெறற்கரு நும்பியைப் பெறுதி நீயெனத்
          திறப்படக் கூறி மறப்படை நூறக்
 
                   (இதுவுமது)
             115 - 119 : கண்டே.........நூற
 
(பொழிப்புரை) பகைவரைக் கொல்லும் ஆற்றலுடைய உதயண மன்னன் இந்நிகழ்ச்சியினைக் கண்கூடாகக் கண்டு அந்த எலிச் செவியரசனை நோக்கி ''வேந்தே ! பகைவரால் தாக்குதற்கரிய பெரிய படையினையுடைய தருசக மன்னனோடு நின்னாற் பற்றப்பட்ட இம்மறவன் வேற்றுமை ஏதும் இல்லாதவன் ஆவன்; ஆதலின் இவனை நீ கொல்லாமல் பாதுகாப்பாயாயின் நீயும் பெறற்கரும் நின் தம்பியை உயிரோடு பெறுகுவை'' என்று அவனுக்கு உறுதியுண்டாகக் கூறிப் பின்னர்த் தன்னெதிரேயுள்ள மறமிக்க பகைப் படையைக் கொல்லுந் தொழிலிலே புகா நிற்ப; என்க.
 
(விளக்கம்) தருசக மன்னனுக்கு நின்னால் கைப்பற்றப்பட்ட இவன் மிகச்சிறந்த நண்பனாவான் ஆதலின் அம்மன்னன் இவன் பொருட்டு நின்றம்பியை விடுதலை செய்வன் என்பது கருத்து. போற்றினையாயின் - கொல்லாமல் பாதுகாப்பாயாயின். போற்றினையாயின் நும்பியைப் பெறுதி என்றது போற்றாக்கால் நும்பி கொல்லப்படுவன் என்பது தோன்ற நின்றது.