பக்கம் எண் :

பக்கம் எண்:365

உரை
 
3. மகத காண்டம்
 
20. சங்கமன்னர் உடைந்தது
 
          கேட்டுப்பொரு ணல்கி வேட்டுவிரைந் தெழுந்து
    130    வெற்றத் தானை முற்றத்துத் தோன்றிப்
          பகைக்கடன் றீர்த்த தகைப்பொலி மார்பனைப்
          பல்லூழ் புல்லி வெல்போர் வேந்த
          படைத்தொழின் மாற்றம் பட்டாங் குரைக்கென
 
                     (இதுவுமது)
            129 - 133 : கேட்டு.........உரைக்கென
 
(பொழிப்புரை) அவ்வுவகைச் செய்தியைக் கேட்ட அம்மகத மன்னன் பெரிதும் மகிழ்ந்து அத்தூதுவர் உவக்கும்படி பொருள் பலவழங்கி உதயணனைக் காண்டற்குப் பெரிதும் விரும்பிவிரைந்து எழுந்து எதிர்வந்து வெற்றியையுடைய படைகளையுடைய அரண்மனை முற்றத்திலே வந்து ஆங்கு வருகின்ற பகையை வெல்லுதலாகிய தன் கடமையைச் செய்துமுடித்த வாகைமாலையால் அழகுற்றுப் பொலிகின்ற மார்பினையுடைய அவ்வுதயணனைப் பன்முறையும் தழுவிக்கொண்டு மகிழ்ந்த பின்னர், அவ்வுதயணனை நோக்கி ''வெல்லும் போரினையுடைய வேந்தனே ! நீ நிகழ்த்திய போர்த் தொழிலின் நிகழ்ச்சிகளை நிகழ்ந்தவாறே உரைத்தருளுக'' என்று வேண்டாநிற்ப; என்க.
 
(விளக்கம்) தூதுவர்க்குப் பொருள் நல்கி என்க. உதயணனைக் காண்டற்கு வேட்டு என்க. வெற்றம் - வெற்றி. பகைக்கடன் - பகையை வெல்லுதலாகிய கடமை. மார்பன் : உதயணன். பல்லூழ் - பன்முறையும். புல்லி - தழுவி. வேந்த : விளி. பட்டாங்கு - நிகழ்ந்தவாறே.