பக்கம் எண் :

பக்கம் எண்:375

உரை
 
3. மகத காண்டம்
 
21. மகட்கொடை வலித்தது
 
           கோயில் புக்கபி னாய்புக ழுதயணன்
           கரந்த வுருவொடு கலந்தகத் தொடுங்கிப்
           பிரிந்த பொழுதி னொருங்கவட்கு மொழிந்த
           அருந்தொழிற் றெளிவு மன்பு மென்றிவை
      5    பெரும்புணை யாக விருந்தகத் துறையும்
           பொற்றொடிப் பணைத்தோண் முற்றிழை மாதரை
           இற்பெருங் கிழமையொடு கற்புக்கடம் பூட்ட
           வரையும் வாயி றெரியுஞ் சூழ்ச்சியுள்
 
                   (உதயணன் சூழ்தல்)
               1 - 8 : கோயில்.........சூழ்ச்சியுள்
 
(பொழிப்புரை) இவ்வாறு உதயணமன்னன் சங்க மன்னரை வென்று பெரும் புகழுடன் அரண்மனைக்கண் புகுந்த பின்னர்,முன்னர்த் தான் மாறு வேடத்தோடு பதுமாபதியோடு சேர்ந்து அவளது கன்னி மாடத்தின்கண் கரந்துறைந்து அப்பெருமகளைப் பிரிந்த காலத்தே ஒரு சேர அவட்குத் தான் கூறிய தன்னுடைய செயற்கருந் தொழிலினது துணிவும் தான் காட்டிய அன்பும் என்னும் இன்னோரன்ன தன் பண்புகளையே பெரிய தெப்பமாகக் கொண்டு துன்பக் கடலை நீந்திக் கன்னிமாடத்தின்கண் உறைகின்ற பொன்னாலியன்ற வளையல்களையும் பருத்த தோள்களையும் தொழிலின் முற்றுப் பெற்ற அணிகலன்களையும் உடைய அப்பதுமாபதியை, இனி இல்லறத்திற்குரிய பேருரிமையோடு கற்பொழுக்கத்தின்  கடமைகளையும் ஏற்பிக்கக் காரணமான பலரறி மணம் செய்தற்குரிய வழியை ஆராய்ந்து கொண்டிருக்கும் பொழுது ; என்க.
 
(விளக்கம்) கரந்த உருவு - மாற்று வேடம். ஒடுங்கி - மறைந்திருந்து. அவட்கு : அப்பதுமாபதிக்கு. புணையாக - தெப்பமாக ; புணையாக என்றதற்கேற்பத் துன்பக் கடலை நீந்தி இருந்து என்க. முற்றிழை - தொழிலின் முற்றுப் பெற்ற அணிகலன். இற் பெருங் கிழமை - விருந்தோம்பல் முதலிய அறச் செயல்கள் செய்யுமுரிமை. கற்புக் கடம் - கற்பொழுக்கத்தின் கடமைகள். அவை இருத்தலும் இருத்தனிமித்தமுமாம். வரையும் - பலரறி மணம் செய்து கொள்ளும். வாயில் - வழி.