பக்கம் எண் :

பக்கம் எண்:377

உரை
 
3. மகத காண்டம்
 
21. மகட்கொடை வலித்தது
 
         
     20    உள்பொருள் வலிக்கு முறுதிச் சூழ்ச்சியன்
           மல்லற் றானை மறப்பெருஞ் சீற்றத்துச்
           செல்பொறி செறித்த பல்புக ழமைச்சனை
           வள்ளிதழ் நறுந்தார் வத்தவர் கோமாற்
           கங்கண் விட்டு மடுக்கற் பாலதூழ்
     25    இங்க ணிவனை யெளிதுதரப் பெற்றும்
           கோல மங்கையைக் கொடாஅ மாகுதல்
           கால நோக்கிற் கரும மன்றென
           வலித்ததை யுணர்த்தி வருதி நீயெனத்
           தலைப்பெரு வேந்தன் றானவற் போக்க
 
          (தருசகன் அமைச்சனை உதயணன்பால் விடுத்தல்)
                  20 - 29 : உள் பொருள்........போக்க
 
(பொழிப்புரை) இவ்வாறு உண்மைப் பொருளைத் துணிதற்குக் காரணமான ஆராய்ச்சியையுடைய அத்தருசக மன்னன் வளம் பொருந்திய படைகளையும், மறப்பண்பையும், பெரிய வெகுளியையும் உடையவனாயிருந்தும் புலன்களிற் செல்லும் தன் பொறிகளை அடக்கிக்கொண்ட பல்வேறு புகழ்களையுடைய அமைச்சனொருவனைத் தனித்திருந்து வரவழைத்துக்கொண்டு அவ்வமைச்சனை நோக்கிப் 'புகழமைந்த பெரியோய்! பெரிய இதழ்களையுடைய மலராற் புனைந்த நறியமாலையினையுடைய வத்தவ நாட்டு மன்னனாகிய உதயணனுக்குரிய ஆகூழ் அவனை அவன் நாட்டினின்றும் இவ்விடத்தே எளிதாகக் கொணர்ந்து தரப்பெற்று வைத்தும், அப்பெருமகனுக்கு அழகிய நம் பதுமாபதி நங்கையை இன்னும் வழங்காதேமாயிருத்தல் இக்காலத்தை நோக்குமிடத்து நற்செயலன்று என்று தான் கருதியதனைக் கூறி அவ்வமைச்சனை 'நீ சென்று என் கருத்தினை அவ்வுதயணனுக்கு உணர்த்தி அவன் மறு மொழியினையுங் கேட்டு வருவாயாக' என்று தலைமைத் தன்மையுடைய அப்பெருவேந்தன் அவ்வமைச்சனை உதயணன் பால்விடுப்ப என்க.
 
(விளக்கம்) உள்பொருள் - உண்மைப் பொருள். சூழ்ச்சியன் : தருசகன். மல்லல் - வளம். சீற்றத்தையுடையவனாயிருந்தும் பொறி செறிந்த அமைச்சன் என்க. வள்பெரிதார் - மாலை. அங்கண்விட்டும் - அவனாட்டினின்றும். அடுக்கற்பாலதூழ் - ஆகூழ். கோலமங்கை - அழகிய பதுமாபதி. காலம் - இச்செவ்வி. வலித்ததை - கருதியதனை.