பக்கம் எண் :

பக்கம் எண்:39

உரை
 
3. மகத காண்டம்
 
3. இராசகிரியம் புக்க
 
         
           நெடுநீர்ப் பேரியாறு நிறைந்துவிலங் கறுத்துப்
     40    பல்வழிக் கூடிய படிய வாகிச்
           செல்வழி யெல்லாஞ் சிறந்த கம்பலை
           கரைபொரு துலாவுந் திரையொலி கடுப்ப
           நிறைவளங் கவினிய மறுகிரு பக்கமும்
           அந்தி வானத் தகடுமுறை யிருந்த
     45    ஒண்கே ழுடுவி னொளிபெறப் பொலிந்து
           கண்ணுற நிவந்த பண்ணமை படுகாற்
           கைவினை நுனித்த மைதவழ் மாடத்
           தரும்படைச் செல்வ ரமர்ந்தினி துறையும்
           பெரும்படைச் சேரி திருந்தணி யெய்திக்
     50    கைபுனை வனப்பினோர் பொய்கை யாக
 
              (படைச்சேரி)
       39-50 ; நெடு,,,,.,,,,பொய்கையாக
 
(பொழிப்புரை) நெடிய நீரையுடைய பேரியாறுகள்
  நிறைந்து ஒன்றனை ஒன்று ஊடறுத்துச் சென்று பலவிடத்தும்
  கூடினாற் போன்ற தோற்றத்தையுடையவாகித்  தாம்
  செல்லுமிடனெல்லாம் மிக்கெழாநின்ற ஆரவாரம் கரையை
  மோதி உலாவாநின்ற அலையினது ஆரவாரத்தை ஒப்ப,
  நிறைந்த செல்வங்களாலே அழகுற்ற வீதிகள்  தமது இரண்டு
  பக்கங்களினும் அந்தி மாலைப் பொழுதின்கண் வானத்தின்
  இடையே நிரல்பட இருந்த ஒளியும் நிறமும் உடைய
  விண்மீன்களின் ஒளி தம்மேற்றவழப் பொலிவுற்று இடத
 ்தோடுயர்ந்துள்ள ஒப்பனை செய்யப்பட்ட படிக்கட்டுகளையுடைய
  கைத்தொழில் நுணுக்கமுடைய முகில் தவழாநின்ற
  மாடமாளிகையின்கண் பிறரால்  வெல்லுதற்க.ரிய ஆற்றலுடைய
  படைத் தலைவர்களாகிய செல்வர்கள் இன்புற்றினிதமர்ந்து
  வாழாநின்ற பெரிய படைச் சேரியானது திருந்திய அழகோடு
  ஒப்பனையும் செய்யப்பட்டமையாலே அழகினாலே ஒரு
  பொய்கைபோலத் தோன்றாநிற்ப என்க.
 
(விளக்கம்) புறத்தே பலதிசையினின்றும் வந்து
  நகரத்தே ஒன்றனை ஒன்று ஊட.றுத்துச் செல்லும் வீதிகள்
  பொய்கையிற்புகும் பேரியாறுகள் போன்றிருந்தன என்றவாறு.
  வீதிகளிலே உண்டாகின்ற ஆரவாரம் பொய்கையில் எழும்
  அலைகளின் ஆரவாரம் போன்றிருந்தது என்றவாறு. பொய்கையில்
  போல ஈண்டும் படிக்கட்டுகளிருந்தன என்றவாறு. மாடங்கள்
  மலராலே ஒப்பனை செய்யப்பட்டிருத்தலால் அப்படைச் சேரி
  மலர்ந்ததொரு பொய்கை போலவே தோன்றிற்று என்றவாறு.
  படைச்சேரி அந்நகரத்தைச் சூழ்ந்திருத்தலின்
  பொய்கைபோன்றிருந்ததென்றார்.