பக்கம் எண் :

பக்கம் எண்:406

உரை
 
3. மகத காண்டம்
 
22. பதுமாபதி வதுவை
 
            இயைந்த வதுவை யெழுநா ணீங்கலும்
      105    பசும்பொற் கிண்கிணிப் பதுமா நங்கையும்
            நயந்த தோழி நன்னலங் காணும்
            விருப்பின ளாகி விரைந்திவண் வருகெனத்
            திருக்கிளர் சிவிகையொடு சிலதரை விடுத்தலின்
 
          (பதுமாபதி யாப்பியாயினியை அழைப்பித்தல்)
               104 - 108 : இயைந்த.........விடுத்தலின்
 
(பொழிப்புரை) இவ்வாறு, பொருந்திய திருமணவினைக்குரிய ஏழு நாள்களும் அகன்ற பின்னர்ப் பசிய பொன்னாலியன்ற கிண்கிணியையுடைய பதுமாபதி நங்கையும், தன்னைப் பெரிதும் விரும்பிய தோழியாகிய யாப்பியாயினியினது சிறந்த நலங்களைக் காணும் பொருட்டுப் பெரிதும் விரும்பியவளாய் அவளை அழைத்துக் கொண்டு விரைவாக இங்கு வருவீராக வென்று அழகுமிக்க ஒரு சிவிகையோடு பணிமாந்தரை விடுத்தலாலே; என்க.
 
(விளக்கம்) வதுவை எழுநாள் - மணச்சடங்கு நிகழ்கின்ற ஏழு நாட்கள். தன்னை நயந்த தோழி என்க. தோழி : யாப்பியாயினி. திரு - அழகு. சிலதர் - பணிமாந்தர்.