பக்கம் எண் :

பக்கம் எண்:416

உரை
 
3. மகத காண்டம்
 
22. பதுமாபதி வதுவை
 
            நள்ளென் யாமத்து நன்னுதல் வெரீஇய
            புள்ளி னற்குறி யுரைத்தலும் பொருக்கெனப்
      170    பெருவிறற் கொழுந னின்னுயிர் மீட்டுப்
            பெற்ற வொழுக்கிற் பெரியோள் போலச்
            செங்கடை மழைக்கட் சேயிழைத் தோழியை
            அங்கை யெறிந்து தங்கா விருப்பமொடு
            காமக் காதலன் கைவினைப் பொலிந்த
      175    ஓவியப் பாவையை யாகத் தொடுக்கி
 
                 (பதுமாபதியின் மகிழ்ச்சி)
              168 - 175 : நள்ளென்.........ஒடுக்கி
 
(பொழிப்புரை) இங்ஙனம் ஐயுறவு கொண்ட அப்பதுமாபதியின்  நிலைமைகண்ட யாப்பியாயினி பின்னரும் பண்டு ஒருநாள் நள்ளிரவின்கண் நல்ல நுதலையுடைய அப்பதுமாபதி நங்கை பெரிதும் அஞ்சிய கூகை யின் குழறலாகிய நல்ல அடையாளத்தை  அவ்வுதயணன் உரைத்தாங்கு உரைத்துக் காட்ட, அதுகேட்டவுடன் பெரிய வெற்றியையுடைய தன் கணவ னுடைய இனிய உயிரைக் கூற்றுவனிடத்தினிருந்து மீட்டும் கைப்பற்றிக் கொண்ட தெய்வக் கற்பொழுக்கத்தினையுடைய சாவித்திரியைப் போல மிக மிக மகிழ்ந்து சிவந்த கடைப்பகுதியையுடைய குளிர்ந்த கண்களையும், சிவந்த அணிகலன்களையும் உடைய தோழியாகிய யாப்பியாயினியைத் தனது அழகிய கையால் பன்முறை தட்டித் தாங்குதற்கரிய ஆர்வத்தோடு தான் காமுற்ற காதலனாகிய அவ்வுதயணனுடைய கைத்தொழிலாலே பொலிவுற்ற  அவ்வோவியத்தைக் கைப்பற்றிக்கொண்டு தன் மார்போடு அணைத்து; என்க.
 
(விளக்கம்) நள்ளென் யாமம் - நள் ளென்னும் ஓசையையுடைய யாமம்; நடுயாமமுமாம். வெரீஇய - அஞ்சிய. நற்குறி - நல்ல அடையாளம். பொருக்கென : விரைவுக் குறிப்பு. பெருவிறற்கொழுநன் : சத்தியவான், பெரி யோள் : சாவித்திரி. மகிழ்ச்சியுற்றோர் : தாம் மகிழ்ச்சியுறுதற்குக் காரண மான செய்தியைக் கூறியவரைக் கையால் தட்டி மகிழ்தல் இயல்பு. தங்கா: தாங்கா என்பதன் விகாரம். ஆகத்து - மார்பின்கண்.