பக்கம் எண் :

பக்கம் எண்:418

உரை
 
3. மகத காண்டம்
 
22. பதுமாபதி வதுவை
 
            நன்னாட் டலைப்பெய னன்றென வெண்ணிக்
            கோட்டமி லுணர்விற் கொற்றவன் குன்றாச்
      185    சேனைப் பெருங்கணி செப்பிய நன்னாட்
            டானைத் தலைத்தாட் டானறி வுறுத்தலின்
            வையக விழவிற் றானுஞ் செய்கையின்
            அழுங்க னன்னக ராவணந் தோறும்
            செழும்பல் யாணர்ச் சிறப்பின் வழாஅது
      190    வண்ணப் பல்கொடி வயின்வயி னெடுத்தலின்
            விண்வேய்ந் தன்ன வியப்பிற் றாகிப
 
              (மணத்துக்குரியன செயப்படுதல்)
           183 - 191 : நன்னாள் ......... வியப்பிற்றாகி
 
(பொழிப்புரை) இனி, தருசக மன்னன் நல்லதொரு நாளிலே திருமணச் செயலைத் தொடங்குதல் நன்றெனக் கருதி இருந்து, பின்னர்க் குற்றமில்லாத உணர்ச்சியினையுடைய அக் கொற்றவனுடைய  குன்றாத கல்வியையு டைய சேனைப் பெருங்கணியாகிய கணிவன் ஆராய்ந்து கூறிய நன்னாளிலே படைத்தலைவர் முன்னிலையிலே இந்நிகழ்ச்சியினை அறிவுறுத்துதலாலே, உலகின்கண் நிகழும் திருவிழா நாளுக்கு அணிசெய்யுமாறு போலே ஆரவார முடைய  அவ்விராசகிரிய நகரத்தின் அங்காடித் தெருக்கள் தோறும் செழு மையுடைய பலவாகிய புதியபுதிய சிறப்புச் செய்தலிற்றவறாமல் பல்வேறு வண்ணங்களையுடைய பலவாகிய கொடிகளை இடந்தொறும் இடந்தொறும் உயர்த்துதலாலே வானவெளியெல்லாம் துகிலால் வேய்ந்தாற்போன்ற வியப்பினைத் தருவதாய்; என்க.
 
(விளக்கம்) தலைப்பெயல் - தொடங்குதல், கோட்டம் - மனக்கோட்டம். கல்வி குன்றாக்கணி என்க. சேனைப் பெருங்கணி - படையெழுச்சிக்கு  முரசறையும் வள்ளுவன். தலைத்தாள் : முன்னிலை. விழவிற்றானும் - விழாநாட்போல. அழுங்கல் - ஆரவாரம். நகர் - இராசகிரியம். ஆவணம் - அங்காடி. யாணர் - புதுமை ; அழகுமாம். வயின் வயின் - இடந்தோறும் இடந்தோறும்.