பக்கம் எண் :

பக்கம் எண்:42

உரை
 
3. மகத காண்டம்
 
3. இராசகிரியம் புக்க
 
         
           மதியுறழ் சங்கின் வாய்வயிற் போந்த
           நிதியம் பெற்ற நீர்மையர் போல
           அதிரா வியற்கை யங்கண் ஞாலத்துக்
     70    குதிரை மருப்புங் கொளற்கரி தாகிய
           அழலுமிழ் நாக நிழலுமிழ் மணியும்
           சிங்கப் பாலுந் தெண்டிரைப் பௌவத்து
           மூவா வமரர் முயன்றுடன் கொண்ட
           வீயா வமுதமும் வேண்டிற் போய்த்தரும்
     75    அரும்பெறற் பண்ட மொருங்ககத் தடக்கி
           விட்டன ரிருவா முட்டில் செல்வத்துப்
           பல்விலை வாணிகர் நல்விலைச் சேரி
           புல்லிதழ் பொருந்திய நல்லித ழாக
 
             (வாணிகர் தெரு)
           67 - 78 : மதி.........நல்லிதழாக
 
(பொழிப்புரை) திங்கள் மண்டிலம் போன்ற தெய்வச்
  சங்கினின்றும் சொரியப்பட்ட செல்வங்களையெல்லாம் பெற்ற
  தன்மையுடையவர்போலச் செல்வச் சிறப்புடையராய் நடுங்காத
  இயல்  பினையுடைய  அழகிய இடங்களமைந்த இவ்வுலகத்தே
  இல்லாக் குதிரைக் கொம்பும், இருந்தும் கைக்கொள்ளுதற்கரிதாகிய
  நெருப்பினையுயிர்க்கின்ற பாம்பினது ஒளிவீசுகின்ற மணியும்,
  அரிமான் பாலும், தெளிந்த அலையினையுடைய கடலிடத்தே
  மூவாமையையுடைய தேவர்கள் பெரிதும் முயன்று ஒருங்கே கூடிக்
  கடைந்தெடுத்த சாவாமைக்குக் காரணமான அமுதமும்
  வேண்டுமெனினும் இல்லையென்னாது அவை கிடைக்குமிடத்தே
  சென்று கைக்கொண்டு கொணர்ந்து தருகின்றவரும், பெறுதற்கரிய
  பண்டங் களையெல்லாம் ஓரிடத்தே திரட்டி அடக்கி வைப்போரும்
  தம் பண்டங்களைத் தங் கையைவிட்டுப் பிறவிடங்களிலே
  வைத்தலில்லாதவரும் முட்டுப்பாடில்லாத செல்வரும் ஆகிய பல்வேறு
  பண்டங்களையும் விற்கும் வாணிகருடைய நல்ல விற்பனையையுடைய
  தெருக்கள் அப்புல்லிதழின் அகத்தே பொருந்திய நல்ல இதழ்களாகவும்
  என்க,
 
(விளக்கம்) தியுறழ் சங்கு என்றது - சங்கநிதியினை.
  சங்க நிதியே நிதிவழங்குவனவற்றுள் சாலச் சிறந்ததென்பர்.
  சங்கநிதிபெற்றோர் பின்னர் எக்காலத்தும் நல்குர வெய்தாராகலின்
  சங்கிற் போந்த நிதியம் பெற்ற நீர்மையர் போல என்றார், குதிரை
  மருப்பு-இல்பொருள். கொளற்கரிதாகிய என்பதனை சிங்கப்பால்
  முதலியவற்றோடும் தனித்தனி கூட்டுக. மூவா - மூத்தலில்லாத.
  வீயா - சாவாத. சாவாமைக்குக் காரணமான அமுதம் என்க.
  இவற்றால் வணிகர் யார் எப்பொருளைக் கேட்பினும் தருகின்ற
  ஆற்றலுடையவராய் இருந்தனர் என்றுணர்த்தினர்.
  விட்டனர்- முற்றெச்சம். வணிகர் தம் பொருளைப் பிறவிடத்தே
  வையார் என்பார் விட்டனரிருவா வாணிகர் என்றார், 'விற்றாற்
  பையிலே வில்லாக்காற் கையிலே.'' என்பதொரு பழமொழியும்
  உண்டு. இதனோடு,
        'இரவலாளரே பெருந்திரு வுறுக
        அரவுமிழ் மணியு மலைகட லமுதும்
        சிங்கப் பாலுந் திங்கட்குழவியும்
        முதிரை வாலுங் குதிரை மருப்பும்
        ஆமை மயிரும் அன்னத்தின் பேடும்
         ஈகென இரப்பினு மில்லென வறியான்
        சடையனை யயன்றைத் தலைவனை
        உடையது கேண்மின் உறுதி யோர்ந்தே.'
   எனவரும் பிற்றை நாட் செய்யுள் ஒப்பு நோக்கற் பாலது,