பக்கம் எண் :

பக்கம் எண்:433

உரை
 
3. மகத காண்டம்
 
23. படையெழுச்சி
 
         
     30    இருநூ றானையு மிராயிரங் குதிரையும்
           அறுநூற் றிரட்டி யடன்மணித் தேரும்
           அறுபதி னாயிர ரெறிபடை மள்ளரும்
           திருமணிச் சிவிகையும் பொருவினைப் படாகையும்
           செங்காற் பாண்டிய நன்று பூண்ட
     35    பைம்பொ னூர்தியும் பவழக் கட்டிலும்
           படாஅக் கொட்டிலும் பண்டிபண் டாரமும்
           கடாஅக் களியானைக் காவலற் கியைந்த
           பணைத்தோட் சிலசொற் பதுமா நங்கைக்
           கமைக்கப் பட்ட வகன்பரி யாளமும்
     40    அன்னவை யெல்லா மந்நிலை நல்கி
 
                      (இதுவுமது)
                30 - 40 : இருநூறு.........நல்கி
 
(பொழிப்புரை) இருநூறு யானைகளையும், இரண்டாயிரங் குதிரைகளையும் ஆயிரத்திருநூறு வெற்றியுடைய மணிகட்டப்பட்ட தேர்களையும் அறுபதினாயிரராகிய கொல்லும் படையேந்திய காலாள் மறவர்களையும், அழகிய மணிபதித்த சிவிகைகளையும், போர்த் தொழிலில் உயர்த்தும் கொடிகளையும், சிவந்த கால்களையுடைய எருதுகளை நன்றாகப்பூட்டிய பசிய பொன்னாலியன்ற ஊர்திகளையும், பவழக் கட்டிலையும், கூடாரங்களையும், பண்டி பண்டாரங்களையும் மதக்களிப்பையுடைய யானையையுடைய உதயண மன்னனுக்கு வேண்டியனவும் பணைத்த தோளையும் சிலவாகிய சொற்களையுமுடைய பதுமாபதி நங்கைக் கென்றமைக்கப்பட்டனவும் ஆகிய பரிவாரங்களையும், இவைபோன்ற பிற பொருள்களையும் அப்பொழுதே வழங்கி; என்க.
 
(விளக்கம்) இராயிரம் - இரண்டாயிரம். அறுநூற்றிரட்டி ஆயிரத்திருநூறு. பொருவினைப்படாகை - போர்த் தொழிலில் உயர்த்துங்கொடி. பாண்டியம் - எருது. படாஅக்கொட்டில் - கூடாரம். படாம் - ஆடை. பண்டி - வண்டி. பண்டாரம் - பல்வேறு பண்டத் தொகுதி. காவலன் : உதயணன். காவலர்க்கு இயைந்தனவும் நங்கைக்கு அமைக்கப்பட்டனவுமாகிய பரியாளம் என்க. பரியாளம் - பரிவாரம்.