பக்கம் எண் :

பக்கம் எண்:436

உரை
 
3. மகத காண்டம்
 
23. படையெழுச்சி
 
           ஒற்றொற் றியவரை யொற்றி னாய்ந்து
           முன்னங் கொள்ளு முபாய முயற்சியொடு
     55    நாவாய் தொகுத்து நளிபுனற் பேரியாற்
           றூர்மடி கங்கு னீர்நெறி போகி
           மலையர ணடுங்க நிலையர ணடுங்க
           ஒற்றி னானு முபாயத் தானும்
           ஆற்றல் சான்ற வாருணி தொலைச்சிக்
     60    கோற்றொழிற் கொற்றங் கொடுத்துநீர் பெயர்மினென்
           றேற்றுரி முரசி னிறைமகன் பணித்த
 
                        (இதுவுமது)
                 53 - 61 : ஒற்று..........பணித்த
 
(பொழிப்புரை) மேலும் பகைவன்பாற் சென்று ஒற்றவேண்டிய செய்திகளை உணர்ந்துவந்த ஒற்றர்களை வேறு ஒற்றர்களாலே ஆராய்ந்துகொண்டு குறிப்பறிந்து கொள்ளுகின்ற தந்திரமுள்ள முயற்சியாலே, ஓடங்களைத் தொகுத்துக்கொண்டு செறிந்த நீரையுடைய பேரியாற்று நீர்வழியே ஊரிலுள்ள மாந்தர் துயிலுகின்ற நள்ளிரவிலே பிறர் அறியாமற் சென்று, பகையரசருடைய மலைஅரணும், மதிலரணும் நிலைகுலைந்து நடுங்கும்படி போர்செய்து, ஒற்றுக் கேள்வியினாலும், உபாயத்தினாலும், ஆற்றல் நிரம்பிய நம் பகையரசனாகிய ஆருணியைக் கொன்று வீழ்த்திச் செங்கோன்மையுடைய தொழிலையுடைய அரசுரிமையை உதயணனுக்குக் கொடுத்து நீயிர் மீண்டு வாருங்கோள்;'' என்று ஆனேற்றின் தோல்போர்த்த வெற்றி முரசினையுடைய இறைமகனாகிய அத்தருசக மன்னன் தமக்குக் கட்டளையிட்ட; என்க.
 
(விளக்கம்) ஒற்றொற் றியவரை ஒற்றினாய்ந்து - பகைப் புலத்துச் சென்று அவர் உணராமல் ஒற்ற வேண்டிய செய்திகளை உணர்ந்து வந்த ஒற்றர்களை வேறு ஒற்றர்களாலே ஆராய்ந்து என்க. ''ஒற்றர் தங்களை ஒற்றரி னாய்தலும்'' (சீவக : 1921) ''ஒற்றொற்றித் தந்த பொருளையு மற்றுமோ, ரொற்றினா லொற்றிக் கொளல்,'' ''ஒற்றொற்றுணராமை யாள்க, உடன் மூவர், சொற்றொக்க தேறப் படும்'' என வரும் பிற சான்றோர் கூற்றும் உணர்க. (திருக்குறள். 588-9.) உபாய முயற்சியொடு - தந்திரமுள்ள முயற்சியால். ஊர்மடிகங்குல் - ஊரிலுள்ள மக்கள் எல்லாம் உறங்கும் இரவில், ''மன்பதை யெல்லாமடிந்த விருங்கங்குல்'' (கலி. 65 : 3) ''ஊர்மடிகங்குல்'' சிலப் 16: 207;. யாற்றின் நீர்வழியே போய் என்க. ஆருணி தொலைச்சி - பாஞ்சால ராயனைக் கொன்று; தொலைச்சுதல் - தோல்வியடையச் செய்தலுமாம். கோற்றொழில் - செங்கோல் செலுத்தும் தொழில். கொற்றம் - அரசுரிமை. இறைமகன் : தருசகன்.