பக்கம் எண் :

பக்கம் எண்:445

உரை
 
3. மகத காண்டம்
 
24. மேல்வீழ் வலித்தது
 
           பின்னிணைக் குமரர் பிங்கல கடகர்
           இன்னாக் காலை யெள்ளி வந்த
           பரும யானைப் பாஞ்சால ராயன்
           அருமுர ணழிய நூறலி னவனமர்க்
     55    காற்றா ருடைந்து நோற்றோ ரொடுங்கும்
           குளிர்நீர் யமுனைக் குண்டுகயம் பாய
           வளியியற் புரவி வழிச்செல விட்டவர்
           பொன்னியற் புரிசையோர் பெண்ணுறை பூமி
           அவணெதிர்ப் பட்டாஅங் கிவணகம் விரும்பா
     60    தீரறு திங்க ளிருந்த பின்றை
 
                    (இதுவுமது)
              51 - 60 : பின்.........பின்றை
 
(பொழிப்புரை) 'பெருமானே! நின்னுடைய தம்பியராகிய பிங்கலகடகர் நம்முடைய இன்னாக்காலத்தே நம்மை இகழ்ந்து நமது கொடிக்கோசம்பி நகரைக் கைப்பற்றுதற்கு வந்த ஒப்பனையுடைய யானையையுடைய பாஞ்சாலராயனாகிய ஆருணியரசன் அரிய தம்முடைய வலிமை கெடும்படி தாக்குதலாலே அவனுடைய போர்க்கு ஆற்றாராய் உடைந்து, நோன்புடையோர் அடங்கியிருக்கும் குளிர்ந்த நீரையுடைய யமுனையாற்றின்கண் ஆழ்ந்த இடத்திலே நீரின்கண் புகாநிற்ப, அவ்வாருணியரசன், போரைக் கைவிட்டபின், அப்பிங்கல கடகர்கள் குறிக்கோளின்றிக் காற்றுப் போல விரைந்து செல்லுகின்ற இயல்பையுடைய அவர்தம் குதிரைகளில் ஏறி அவை செல்லும் வழியிலே செல்லச் சென்றவர், தம்வழியிலே பொன்னாலியன்ற மதில்களையுடைய பெண்களே உறைகின்ற நிலத்தைக் கண்டு மீண்டும் இக்கோசம்பியிலுள்ள தங்கள் வீட்டிற்கு வருதலை விரும்பாராய் ஓராண்டு அந்நிலத்திலேயிருந்த பின்னர்; என்க.
 
(விளக்கம்) இணைக்குமரர் - இரட்டையாகப் பிறந்த பிங்கலகடகர். இன்னாக்காலை - துன்பமுடைய பொழுது. எள்ளி - இகழ்ந்து. கோசம்பியைக் கைப்பற்றுதற்கு வந்த என்க. பருமம் - ஒப்பனை. பாஞ்சாலராயன் : ஆருணியரசன். பெண்ணுறைபூமி - மகளிர் மட்டுமே உறைகின்ற நிலம். இவணகம் - இவ்விடத்தை. ஈரறு திங்கள் - ஓராண்டு.