பக்கம் எண் :

பக்கம் எண்:452

உரை
 
3. மகத காண்டம்
 
24. மேல்வீழ் வலித்தது
 
           இருபான் மருங்கினுந் திரிதருங் கண்ணின்
           அழறிரண் டன்ன வாலி சோர்ந்தவர்
     105    குழறிரண் டணவருங் கோல வெருத்திற்
           பல்லூழ் தெறித்தெழப் புல்லி மற்றுநும்
           அல்லல் காண்பதற் கமைச்சுவழி யோடாப்
           புல்லறி வாளனேன் செய்தது நினைஇக்
           கவற்சி வேண்டா காளைக ளினியென
 
          (உதயணன் தம்பியரைத் தழுவிக் கூறுதல்)
              103 - 109 : இருபான்.........இனியென
 
(பொழிப்புரை) தன்னுடைய இருபக்கத்திலும் நிற்கின்ற தம்பியர் இருவரையும் காண்டற்கு விரும்பி, அவ்விருபக்கங்களிலும் மாறி மாறிப் பிறழுகின்ற தன்னுடைய கண்களின் தீயைத் திரட்டினாலொத்த துன்பக் கண்ணீர்த்துளி வீழ்ந்து அத் தம்பிமாருடைய குழற்சிகை திரண்டு மேல்நோக்கி யசைகின்ற அழகிய பிடரின் கண் பன்முறையும் தெறித்து எழும்படி அவரை அணைத்துக்கொண்டு, ''காளையீர்! இனி நுங்களுடைய இப்பெரிய துன்பத்தை யான் காண்பதற்குக் காரணமாய் என்னுடைய நல்லமைச்சர் காட்டிய நன்னெறியின்கண் செல்லாத புல்லறிவுடையேன் செய்த காரியங்களை நினைத்து நுங்கள் கவலையை மாற்றிக் கொள்ளக் கடவீர்'' என்று கூறி; என்க.
 
(விளக்கம்) இரண்டு தம்பிகளையும் காண்டற்கு ஒரே செவ்வியில் விருப்பம் நிகழ்தலான் கண்கள் இருமருங்கினும் மாறிமாறி ஓடின என்க. ஆலி - கண்ணீர்த்துளி. குழல் - மயிர்முடி. அணவருதல் -  மேனோக்கியசைதல். எருத்து - பிடர். நுங்களுக்கு இத்தகைய துன்பம் வருதற்கு என் செயல்களே காரணமாவதன்றி நுங்கள் செயலன்று. ஆதலின் அதனை நினைத்துக் கவலையொழிக என்று தேற்றியபடியாம். காளைகள்: விளி.